இடம்பெயர் தொழிலாளர்களுக்கு இலவச ரேஷன்... தமிழகம் உட்பட 11 மாநிலங்களில் 1% கூட வழங்கவில்லையாம்!
டெல்லி: தமிழகம் உள்பட 11 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு வழங்குவதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட இலவச ரேஷன் உணவு பொருள்களில் ஒரு சதவீதத்தை கூட விநியோகம் செய்யவில்லை என அதிர்ச்சி தகவல் கிடைத்துள்ளது.
ஆத்மநிர்பார் பாரத் அபியான் திட்டத்தின் கீழ் கொரோனா நெருக்கடியால் வேலையில்லாமல் சொந்த ஊர்களுக்கு திரும்பும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் நலன் கருதி மே, ஜூன் ஆகிய இரு மாதங்களுக்கு ரேஷன் கடைகளில் இலவச உணவு பொருட்கள் வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
இந்த திட்டத்தின் கீழ் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் உள்பட ஏழைகளுக்கு கடந்த ஏப்ரல் முதல் 5 கிலோ அரிசி அல்லது கோதுமை, ஒரு கிலோ பருப்பு ஆகியவை ரேஷன் கடைகளில் இலவசமாக வழங்கப்படுகிறது. ரேஷன் கார்டு இல்லாவிட்டாலும் வழங்கப்படுகிறது.
டெல்லியையே காலி செய்யும் பிரியங்கா.. அதிரடியாக லக்னோவில் குடியேறுகிறார்-உ.பி.யில் கேம் ஸ்டார்ட்
மத்திய அமைச்சகம்
ஆத்மநிர்பார் பாரத் அபியான் திட்டத்தின் கீழ் மே மற்றும் ஜூன் மாதத்திற்கு 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு 6.38 லட்சம் மெட்ரிக் டன் அளவிலான உணவு பொருட்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. ஆனால் அந்த அரசுகள் ஜூன் 30-ஆம் தேதி நிலவரப்படி, வெறும் 1.07 லட்சம் மெட்ரிக் டன் அல்லது ஒதுக்கீடு செய்ததில் 13 சதவீதம் மட்டுமே வழங்கியுள்ளதாக மத்திய அமைச்சகம் வெளியிட்ட தகவல்கள் கூறுகின்றன.
இரு மாதங்கள்
குறைந்தது 26 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 100 சதவீத உணவு பொருட்களை மத்திய அரசிடம் இருந்து பெற்றுக் கொண்டன. எனினும் அந்த மாநிலங்களில் ஒன்று கூட அவற்றை புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு கடந்த இரு மாதங்களாக வழங்கவில்லை.
2.25 லட்சம்
அதிகபட்சமாக உத்தரப்பிரதேசத்திற்கு 1,42,033 மெட்ரிக் டன்கள் வழங்கப்பட்டன. ஆனால் அந்த மாநிலம் வெறும் 3,324 மெட்ரிக் டன் அதாவது 2.03 சதவீதம் மட்டுமே வழங்கியுள்ளது. மே மாதம் 4.39 லட்சம் பேருக்கும், ஜூன் மாதம் 2.25 லட்சம் பேருக்கும் வழங்கியுள்ளது.
ஜூன் மாதம்
அது போல் பீகார் மாநிலமும் இரு மாதங்களுக்கான பொருட்களை பெற்று கொண்டன. அதாவது 86,450 மெட்ரிக் டன் பொருட்களை பெற்றுக் கொண்டு 1.842 மெட்ரிக் டன் (2.13 சதவீதம்) மட்டுமே வழங்கியது. அதிலும் மே மாதம் 3.68 லட்சம் பேருக்கு கொடுக்கப்பட்டுள்ளது . ஜூன் மாதம் ஒருவருக்கு கூட வழங்கவில்லை.
புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்
இதுபோல் ஆந்திரம், கோவா, குஜராத், ஜார்க்கண்ட், மகாராஷ்டிரா, மேகாலயா, ஒடிஸா, சிக்கிம், தமிழகம், தெலுங்கானா, திரிபுரா ஆகிய 11 மாநிலங்களும் யூனியன் பிரதேசம் லடாக்கும் ஜூன் மாதம் ஒரு சதவீதம்கூட புலம்பெயர்ந்த பயனாளிகளுக்கு உணவு பொருட்களை வழங்கவில்லை. சில மாநிலங்கள் அனுமதிக்கப்பட்ட உணவு பொருட்களை இன்னும் பெறவில்லை. உதாரணமாக ஒடிஸாவுக்கு 32,360 மெட்ரிக் டன் உணவு பொருட்கள் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில் 388 மெட்ரிக் டன் மட்டுமே பெற்றனர்.
திட்டம் வேண்டாம்
கோவா, தெலுங்கானா உள்ளிட்ட 7 மாநிலங்கள் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் மாநிலத்தை விட்டு சொந்த மாநிலங்களுக்குச் சென்றுவிட்டதால் இந்த திட்டத்தை தங்களால் அமல்படுத்த முடியவில்லை என மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளன. இதுகுறித்து உணவு மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான் கூறுகையில் சில மாநிலங்கள் ஏழைகளுக்கு உணவு பொருட்களை வழங்கவில்லை.
தீவிரம்
இது கவலைக்குரியதாகும். ஏழைகள் மீது அந்த மாநிலங்கள் அக்கறை கொள்ள வேண்டும். மாநிலங்களுக்கு உணவு பொருட்களை வழங்குவதில் எங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை. அவற்றை இலவசமாக கொடுக்கும் போது அதை விநியோகிப்பதில் இந்த மாநிலங்களுக்கு என்ன பிரச்சினை என எனக்கு தெரியவில்லை. இந்த பிரச்சினையை நாங்கள் தீவிரமாக எடுத்துக் கொண்டுள்ளோம் என்றார்.
வெறும் 2 கோடி பேர்
இலவச உணவு பொருட்கள் மூலம் 8 கோடி புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பயன்பெறுவார்கள் என நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியிருந்தார். ஆனால் மே மற்றும் ஜூன் மாதங்களில் 1.21 கோடி பேரும், 92.44 லட்சம் பேரும் என மொத்தமாக 2.13 கோடி புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு மட்டுமே இலவச உணவு பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.