வேளாண் சட்டத்தை ரத்து செய்ய...ஒரு தாயாக மகனுக்கு உத்தரவிடுங்கள்...மோடியின் தாய்க்கு விவசாயி கடிதம்!
டெல்லி: வேளாண் சட்டத்தை ரத்து செய்ய ஒரு தாயாக மகனுக்கு உத்தரவிடும்படி, பிரதமர் மோடியின் தாய்க்கு டெல்லியில் போராடி வரும் விவசாயி ஒருவர் கடிதம் எழுதியுள்ளார்.
அவ்வாறு செய்தால் இந்த முழு நாடு முழுவதும் உங்களுக்கு நன்றி தெரிவிக்கும் என்று அந்த கடிதத்தில் விவசாயி கூறியுள்ளார்.
வேளாண் சட்டம் நடைமுறையில் உள்ளதற்கு அதானி, அம்பானி மற்றும் பிற கார்ப்பரேட் குடும்பங்களின் உத்தரவே காரணம் என்று அவர் தெரிவித்துள்ளார்.
தொடர் போராட்டம்
மத்திய அரசின் வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி தலைநகர் டெல்லியில் பஞ்சாப், ஹரியானா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மத்திய அரசு அவர்களுடன் பல கட்ட பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் அது தோல்வியில்தான் முடிந்து வருகிறது.
டிராக்டர் பேரணி
வேளாண் சட்டத்தை நிரந்தரமாக ரத்து செய்ய முடியாது என மத்திய அரசு பிடிவாதமாக உள்ளதால், போராட்டத்தை நிறுத்த போவதில்லை என்பதில் விவசாயிகள் தெளிவாக உள்ளனர். நாளை மறுநாள் குடியரசு தினம் அன்று ஒரு லட்சம் டிராக்டர்களுடன் பிரமாண்ட பேரணி நடத்த விவசாயிகள் திட்டமிட்டு உள்ளனர்.
மோடியின் தாய் ஹீராபென்னுக்கு கடிதம்
இந்த நிலையில் வேளாண் சட்டத்தை ரத்து செய்ய ஒரு தாயாக மகனுக்கு உத்தரவிடும்படி, பிரதமர் மோடியின் தாய்க்கு விவசாயி ஒருவர் கடிதம் எழுதியுள்ளார். டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்ட பஞ்சாபின் ஃபெரோஸ்பூர் மாவட்டம் கோலு கா மோத் கிராமத்தை சேர்ந்த ஹர்பிரீத் சிங் என்ற விவசாயி, பிரதமர் நரேந்திர மோடியின் தாயான 100 வயதான ஹீராபென்னுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
கனத்த இதயத்துடன் எழுதுகிறேன்
நான் இந்த கடிதத்தை கனமான இதயத்துடன் எழுதுகிறேன். தேசத்துக்கும், உலகத்துக்கும் உணவளிக்கும் விவசாயிகள், மூன்று வேளாண் சட்டங்கள் காரணமாக இந்த கடும் குளிர்காலத்தில் டெல்லியின் சாலைகளில் தூங்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர் என்பதை நீங்கள் அறிவீர்கள். இதில் 90-95 வயதுடைய விவசாயிகளும், பெண்களும், குழந்தைகளும் அடங்குவர். கடும் குளிர் காலநிலை விவசாயிகளை நோய்வாய்ப்படுத்துகிறது. சிலர் குளிரை தாங்க முடியாமல் இறந்தும் விடுகின்றனர். இது நம் அனைவருக்கும் கவலை அளிக்கிறது.
இந்த நாடே நன்றி கூறும்
டெல்லியின் எல்லைகளில் நடைபெறும் இந்த அமைதியான போராட்டத்துக்கு அதானி, அம்பானி மற்றும் பிற கார்ப்பரேட் குடும்பங்களின் உத்தரவின் பேரில் நிறைவேற்றப்பட்ட மூன்று கருப்பு வேளாண் சட்டங்களே காரணமாகும். நான் இந்த கடிதத்தை மிகுந்த நம்பிக்கையுடன் எழுதுகிறேன். உங்கள் மகன் நரேந்திர மோடி நாட்டின் பிரதமர். அவர் நிறைவேற்றிய வேளாண் சட்டங்களை அவரால் ரத்து செய்ய முடியும். வேளாண் சட்டங்களை ரத்து செய்ய நீங்கள் அவருக்கு உத்தரவிட வேண்டும். ஒரு தாயால் மட்டுமே தன் மகனுக்கு உத்தரவிட முடியும். நீங்கள் அவ்வாறு செய்தால் இந்த முழு நாடும் உங்களுக்கு நன்றி தெரிவிக்கும் என்று அந்த கடிதத்தில் ஹர்பிரீத் சிங் கூறியுள்ளார்.