ஒரே ஒரு கூட்டணி கட்சி... ராமதாஸ் அத்வாலே மட்டும்தான் பாக்கி.. மோடி அமைச்சரவையில்!
டெல்லி: மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வானின் மறைவால், பிரதமர் மோடி அமைச்சரவையில் தற்போது ஒரே ஒரு கூட்டணி கட்சிதான் மிஞ்சியுள்ளது.
பிரதமர் மோடி தலைமையில் 2வது தேசிய ஜனநாயக கூட்டணி அரசு நடந்து வருகிறது. கூட்டணி அரசு என்றாலும் கூட வெகு சில கூட்டணிக் கட்சிகளுக்கு மட்டும்தான் பிரதமர் மோடி அமைச்சரவையில் இடம் கொடுத்திருந்தார். அதில் பல கட்சிகள் அடுத்தடுத்து விலகிப் போய் விட்டன. கடைசியில் மிஞ்சியது 2 கட்சிகள் மட்டுமே.
ஒன்று ராம் விலாஸ் பாஸ்வானின் லோக் ஜன சக்தி கட்சி.. இன்னொன்று ராமதாஸ் அத்வாலேவின் இந்திய குடியரசுக் கட்சி. இந்த இரண்டு கட்சிகள் மட்டுமே அமைச்சரவையில் நீடித்து வந்த நிலையில் தற்போது அத்வாலே கட்சி மட்டுமே மிஞ்சி நிற்கிறது.
மண்டல் கமிஷன் நாயகன்... ராம் விலாஸ் பஸ்வான்...அப்படி என்னதான் செய்து விட்டார்!!
2019ல் வெற்றி
2019ம் ஆண்டு லோக்சபா தேர்தல் முடிந்த பிறகு மோடி தலைமையில் மீண்டும் கூட்டணி ஆட்சி அமைந்தது. அறுதிப் பெரும்பான்மையுடன் பிரதமர் மோடி கம்பீரமாக ஆட்சி அமைத்தாலும் கூட கூட்டணிக் கட்சிகளுக்கும் அமைச்சரவையில் பெருந்தன்மையுடன் இடம் கொடுத்தார். அப்போது சிவசேனா சார்பில் அரவிந்த் சாவந்த், ஷிரோமணி அகாலிதளம் சார்பில் ஹர்சிம்ரத் கெளர் பாதல், லோக் ஜனசக்தி சார்பில் ராம் விலாஸ் பாஸ்வான் மற்றும் அத்வாலே ஆகியோருக்கு இடம் கிடைத்தது.
சிவசேனா விலகல்
மகாராஷ்டிராவில் நடந்த சட்டசபைத் தேர்தலுக்குப் பிந்தைய பாஜகவின் செயல்பாடுகளாலும் கோமாளித்தனங்களாலும் கடுப்பான சிவசேனா முதலில் கூட்டணியை விட்டு விலகியது. அமைச்சரவையிலிருந்தும் விலகியது. பின்னர் விவசாய மசோதா விவகாரத்தில் பாஜகவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து அகாலிதளம் விலகியது. இந்த நிலையில் யாரும் எதிர்பாராத விதமாக ராம் விலாஸ் பாஸ்வான் மரணமடைந்தார்.
பாஸ்வான் மரணத்தால் காலியிடம்
தற்போது பிரதமர் மோடி அமைச்சரவையில் ராமதாஸ் அத்வாலே மட்டுமே மிஞ்சியுள்ளார். மோடி அமைச்சரவையில் அவரைத் தவிர்த்து மொத்தம் 57 அமைச்சர்கள் உள்ளனர். அதில் 24 பேர் கேபினட் அமைச்சர்கள். 9 பேர் தனிப்பொறுப்புடன் கூடிய இணை அமைச்சர்கள். 24 பேர் துணை அமைச்சர்கள். தற்போது பாஸ்வான் மரணம், அரவிந்த் சாவந்த் மற்றும் ஹர்சிம்ரத் ஆகியோரின் ராஜினாமா எதிரொலியால் கேபினட் அமைச்சர்கள் எண்ணிக்கை 21 ஆக குறைந்துள்ளது.
சின்ன அமைச்சரவை
அதேபோல சமீபத்தில் பாஜகவைச் சேர்ந்த அமைச்சர் சுரேஷ் அங்கடி மரணமடைந்ததால் துணை அமைச்சர்கள் எண்ணிக்கையும் 23 ஆக குறைந்துள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர்களில் 15 சதவீதம் பேர் வரை அமைச்சர்களாக வைத்துக் கொள்ளலாம். அப்படிப் பார்த்தால் 80 அமைச்சர்கள் வரை பதவியில் அமர்த்த முடியும். ஆனால் பிரதமர் மோடி சிறிய அமைச்சரவையை மட்டுமே வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.