இனி எல்லா ஊழியருக்கும் ஒரே மாதிரி அடிப்படை ஊதியம்.. அனைத்து துறை பெண்களுக்கும் நைட் ஷிப்ட்: நிர்மலா
டெல்லி: அனைத்து துறைகளிலும் இரவு ஷிப்ட் பணிகளில் பெண்களை ஈடுபடுத்தலாம் என்றும், உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
பிரதமர் அறிவித்த 20 லட்சம் கோடி ரூபாய் நிதி பேக்கேஜ் தொடர்பாக, தொடர்ந்து இரண்டாவது நாளாக, இன்று மாலை செய்தியாளர்களை சந்தித்தார் நிர்மலா சீதாராமன்.
இன்று விவசாயத்துறை, புலம்பெயர் தொழிலாளர்கள் தொடர்பாக, உள்ளிட்ட 9 வகை அறிவிப்புகள் வெளியிடுவதாக அவர் தெரிவித்துவிட்டு, பேட்டியை ஆரம்பித்தார்.
நிர்மலா சீதாராமன் அறிவிப்பால் உடனடி பலன் இல்லையே.. பணப் புழக்கத்திற்கு என்ன வழி? எழும் கேள்விகள்
தொழிலாளர் நலம்
தனது பேட்டியின்போது, தொழிலாளர் நலம் குறித்து அவர் பேசுகையில் கூறியதை பாருங்கள்: அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு உரிய நேரத்தில் ஊதியம் கிடைத்திட வேண்டும். குறைந்தபட்ச ஊதியம் சீராக இருக்க வேண்டும் என்ற முடிவை எடுத்துள்ளோம்.
அடிப்படை ஊதியம்
தற்போது 30 சதவீத ஊழியர்களுக்கு மட்டும் தான் அடிப்படை ஊதியம் என்பது நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. அதை அனைத்து ஊழியர்களுக்கும் விரிவுபடுத்தி உள்ளோம். அதாவது இனிமேல், அடிப்படை ஊதியம் 100 சதவீத ஊழியர்களுக்கும் ஒரே மாதிரியாக இருக்கும். அதைவிட குறைவான ஊதியத்தை நிறுவனங்கள் கொடுக்க முடியாது.
பெண்களுக்கு நைட் ஷிப்ட்
அனைத்து வகையான துறைகளிலும் பெண்களுக்கு இரவு பணி அனுமதிக்கப்பட வேண்டும். இதற்காக கூடுதல் பாதுகாப்பு வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட வேண்டியது கட்டாயம். சாலையோர தொழிலாளர்களுக்கும் சமூக பாதுகாப்பு திட்டங்கள் அமல்படுத்தப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
குடும்பம்
இதனிடையே பெண்களுக்கு இரவு ஷிப்ட் என்பது, குடும்ப வாழ்க்கையில் பாதிப்பை ஏற்படுத்தும் என்ற குரல்கள் எழத் தொடங்கியுள்ளன. குழந்தைகளை கவனிப்பது பாதிக்கப்படும், இது தொழிலாளர் நலனுக்கு எதிரானதாக போய்விடும் என்று நெட்டிசன்கள் கருத்து கூறி வருவதை பார்க்க முடிகிறது.