ஆப்ரேஷன் கோவிட் வேக்சின்.. இந்தியா முழுக்க தயாராகும் விமான நிலையங்கள்.. ஏன் தெரியுமா? சுவாரசியம்!
டெல்லி: கொரோனா வேக்சின் எப்போது வேண்டுமானாலும் மக்களுக்கு கிடைக்கலாம் என்ற நிலையில், தற்போது நாடு முழுக்க இருக்கும் விமான நிலையங்கள் கொரோனா தடுப்பு மருந்து வர்த்தகத்திற்காக தயாராகி வருகிறது.
உலகம் முழுக்க 140க்கும் அதிகமான நிறுவனங்கள் கொரோனா தடுப்பு மருந்து சோதனையை செய்து வருகிறது. இதில் ஃபைசர், மாடர்னா ஆகிய நிறுவனங்கள் கொரோனா சோதனையை வெற்றிகரமாக முடித்துவிட்டு மருந்துக்கு அனுமதி பெற திட்டமிட்டுள்ளது.
இன்னொரு பக்கம் ஆக்ஸ்போர்ட் - ஆஸ்டர்செனகா, பாரத் பயோடெக் ஆகிய நிறுவனங்கள் இறுதிக்கட்ட கொரோனா வேக்சின் சோதனையில் ஈடுபட்டு வருகிறது. இந்த தடுப்பு மருந்துகளுக்கு எப்போது வேண்டுமானாலும் அனுமதி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
திட்டப்படி நடந்தால்.. 3-4 மாதங்களில் இந்தியாவிற்கு கொரோனா வேக்சின் கிடைக்கும்.. சீரம் நிறுவனம்!
என்ன நிலை
இந்த நிலையில்தான் கொரோனா தடுப்பு மருந்துகளை ஒரு பகுதியில் இருந்து இன்னொரு பகுதிக்கு கொண்டு செல்ல இந்தியாவில் இருக்கும் விமான நிலையங்கள் தீவிரமான ஏற்பாடுகளை செய்து வருகிறது. தற்போது உருவாக்கப்பட்டு இருக்கும் ஃபைசர் கொரோனா வேக்சின் -40 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் வைக்கப்பட வேண்டும். அதேபோல் மாடர்னா வேக்சின் -20 டிகிரி செல்ஸியஸ் வெப்பநிலையில் வைக்கப்பட வேண்டும்.
ஆனால் எப்படி
இதனால் இந்த தடுப்பு மருந்துகளை ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு கொண்டு செல்வது மிகவும் சிரமமான காரியம் ஆகும். கார்கோ விமானங்களில் இதை கொண்டு செல்லும் போது இதற்கு என்று தனி ஸ்டோரேஜ் பகுதிகள் இருக்க வேண்டும். விமான நிலையத்தில் இருக்கும் போதும் அதற்கு என்று தனி சேமிப்பு குளிர் அரங்குகள் இருக்க வேண்டும்.
பாதுகாப்பு
கொஞ்சம் கூட வெப்பநிலை மாறாமல் மிகவும் பாதுகாப்பாக இந்த வேக்சின்களை இடமாற்றம் செய்ய வேண்டும். இதற்காக தற்போது இந்தியா முழுக்க இருக்கும் பல்வேறு விமான நிலையங்களில் கொரோனா வேக்சின் ஏற்றுமதி, இறக்குமதிக்காக வசதிகள் செய்யப்பட்டு வருகிறது. டெல்லி விமான நிலையத்தில் இதற்காக -20 செல்ஸியசில் வேக்சின்களை வைக்கும் கார்கோ வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
வசதி
விமான நிலையத்தின் சேமிப்பு கிடங்கில் இருந்து விமானத்திற்கு கொண்டு செல்லும் இடைப்பட்ட பகுதியிலும் வெப்பநிலை மாறாமல் இருக்கும் வகையில் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.அதாவது ஒரு சின்ன இடத்தில் கூட வேக்சின் அதிக வெப்பநிலைக்கு செல்லாத வகையில் இங்கு புதிய வசதிகள் செய்யப்பட்டுள்ளது. இன்னொரு பக்கம் பாரத் பயோ டெக் நிறுவனம் அமைந்து இருக்கும் ஹைதராபாத் விமான நிலையத்திலும் ஏற்பாடுகள் தீவிரம் ஆகி வருகிறது.
வேக்சின்
இந்த நிறுவனம்தான் கோவாக்சின் மருந்தை உருவாக்கி உள்ளது. இங்கிருந்து இதனால் அதிக மருந்துகள் ஏற்றுமதி செய்யப்படலாம் என்பதால், இங்கும் -20 டிகிரி செல்ஸியஸ் வெப்பநிலையில் சேமிப்பு கிடங்குகள் அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல் வேக்சினை எடுத்து செல்ல தனி சாலை அமைப்புகளும் அமைக்கப்பட்டுள்ளது. மொத்தமாக இங்கு சேமிப்பு கிடங்குகள் இதற்காக மாற்றப்பட்டுள்ளது.
ஸ்பைஸ் ஜெட்
இன்னொரு பக்கம் ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் இதேபோல் கொரோனா வேக்சின்களை கொண்டு செல்வதற்காக ஏற்பாடுகளை செய்துள்ளது. -40 டிகிரி செல்ஸியஸ் வெப்பநிலையில் வேக்சின்களை கொண்டு செல்வதற்காக இந்த நிறுவனம் வசதிகளை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிறுவனத்தின் கார்கோ விமானங்கள் வேக்சின்களை கொண்டு செல்ல அதிகம் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வேறு விமானம்
இது போக சென்னை, மும்பை, திருவனந்தபுரம் விமான நிலையங்களிலும் இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. நாடு கொரோனா வேக்சினை ஒரு பகுதியில் இன்னொரு பகுதிக்கு கொண்டு செல்வதற்கான தீவிரமான ஏற்பாடுகள் செயயப்பட்டு வருகிறது. மருந்துகள் கைக்கு வந்தவுடன் பணிகள் தொடங்கும் என்று கூறப்படுகிறது.