ஒன்று கூடும் எதிர்கட்சிகள்.. தேர்தல் ஆணைய அலுவலகத்திற்கு எதிரே நாளை தர்ணா.. சந்திரபாபு நாயுடு தகவல்
டெல்லி: எதிர்கட்சிகள் சார்பாக நாளை தலைமை தேர்தல் ஆணைய அலுவலகம் எதிரே, தர்ணா போராட்டம் நடத்தப்பட உள்ளதாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார்.
பாஜகவுக்கு ஆதரவாக தேர்தல் ஆணையம் செயல்பட்டதை கண்டித்தும், ஒப்புகை சீட்டு இயந்திரங்களில் பதிவான வாக்குகளை முதலில் எண்ண கோரியும் தர்ணாவில் ஈடுபட உள்ளதாக சந்திரபாபு தகவல் தெரிவித்துள்ளார்.
இந்த போராட்டம் தொடர்பாக அனைத்து எதிர்கட்சி தலைவர்களுடனும் சந்திரபாபு நாயுடு தொலைபேசியில் பேசியுள்ளதாக தெரிகிறது அப்போது பாரதிய ஜனதா கூட்டணயில் அல்லாத கட்சி தலைவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து நாளை தலைமை தேர்தல் ஆணையத்திற்கு முன்பாக திரண்டு தர்ணா போராட்டத்தில் ஈடபட வேண்டும்.
வாக்கு எண்ணிக்கை நாளன்று முதலில் விவிபாட் இயந்திரங்களில் பதிவான ஓட்டுகளை எண்ண கோரிக்கை விடுத்து தர்ணாவில் முழக்கங்கள் எழுப்ப கட்சி தலைவர்களிடம் சந்திரபாபு வலியுறுத்தியுள்ளார். மேலும் மத்தியில் பாரதிய ஜனதா தலைமையிலான ஆட்சி மீண்டும் வந்துவிட கூடாது என்பதில் தாம் உறுதியாக இருப்பதாகவும் அதற்கான தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார் சந்திரபாபு.
தேர்தல் ஆணையமானது தனது அதிகாரங்களை தவறாக பயன்படுத்தி, பாரதிய ஜனதாவிற்கு ஆதரவாக பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டியுள்ளார். எக்ஸிட் போல்கள் குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், மக்களின் நாடித்துடிப்பை பிடித்து பார்க்க ஊடகங்கள் தவறிவிட்டதாக கூறியுள்ளார்.
தயாராக இருங்கள்.. ராகுலுக்கு வந்த முக்கிய அறிவுரை.. இன்று இரவே முக்கிய தலைகளை சந்திக்க திட்டம்!
வாக்களிப்புக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் பெரும்பாலும் தவறாகவே முடிந்துள்ளதாக அவர் கூறியுள்ளார். ஆந்திராவில் தனது கட்சி 110 எம்எல்ஏக்களையும் 20 எம்பிக்களையும் நிச்சயம் பெறும் என கூறியுள்ளார். விவிபாட் மெஷின்களில் பதிவாகியுள்ள வாக்குகளை எண்ணும் போது தெலுங்கு தேசம் கட்சி முகவர்கள் மிகவும் கவனமாகவும், விழப்புடனும் இருக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்
சந்தேகத்திற்கிடமின்றி தெலுங்கு தேசம் கட்சியின் ஆட்சி தான் ஆந்திராவில் அமையும் என கூறிய அவர், அதே போல மத்தியில் பாரதிய ஜனதா அல்லாத கட்சி தான் ஆட்சிக்கு வரும் எனவும் கூறியுள்ளார்.