லோக்சபாவில் இருந்து எதிர்கட்சிகள் வெளிநடப்பு - மழைக்கால கூட்டத்தொடரை புறக்கணிக்க முடிவு
டெல்லி: ராஜ்யசபா கூட்டத்தொடர் முடியும் வரை சஸ்பெண்ட் செய்யப்பட்ட 8 எம்.பி.க்கள் மீதான நடவடிக்கையை திரும்பப் பெறும் வரை நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் பங்கேற்கப் போவதில்லை எனக் கூறி எதிர்க்கட்சி எம்பிக்கள் இன்று ராஜ்யசபாவில் இருந்தும் லோக்சபாவில் இருந்து வெளிநடப்புச் செய்துள்ளனர். நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இன்று அனல் பறந்தது.
மத்திய அரசு கொண்டுவந்த இரு வேளாண் மசோதாக்கள் ராஜ்யசபாவில் ஞாயிறன்று எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா மீதான விவாதத்தின் போது எதிர்க்கட்சி எம்பிக்கள் காகிதங்களை கிழித்து அவையின் துணைத் தலைவர் ஹரிவன் மீது வீச முயன்றதால் பெரும் கூச்சலும் குழப்பமும் ஏற்பட்டது.
அவையில் விதிமுறைகளை மீறி செயல்பட்ட திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. டேரீக் பிரையன், டோலா சென், ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங், காங்கிரஸ் எம்.பி.க்கள் ராஜீவ் சத்சவ், சயத் நசீர் ஹூசேன், ரிபுன் போரா, இந்திய கம்யூனிஸ்ட் எம்.பி. கேகே. ராகேஷ், இளமாறம் கரீம் ஆகியோரை கூட்டத்தொடர் முடியும் வரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார் அவைத்தலைவர் வெங்கையா நாயுடு.
ராஜ்யசபா எம்பிக்கள் சஸ்பெண்ட் - லோக்சபா கூட்டத்தையும் புறக்கணிப்பதாக எதிர்க்கட்சிகள் அறிவிப்பு
விடிய விடிய தர்ணா
சஸ்பெண்ட் உத்தரவை திரும்பப் பெறக்கோரி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் முழுக்கமிட்டதால், அவை நாள்முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. ஆனால், சஸ்பெண்ட் செய்யப்பட்ட 8 எம்.பி.க்களும் நாடாளுமன்றத்தை விட்டு வெளியே செல்லாமல் இரவு முழுவதும் அங்கேயே தங்கி இருந்து விடிய விடிய தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
எதிர்கட்சிகள் புறக்கணிப்பு முடிவு
இன்றைய காலை கூடிய ராஜ்யசபாவில் எம்பிக்கள் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கையை திரும்பப் பெற வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் வலியுறுத்தினார். இல்லையெனில் கூட்டத் தொடரை எதிர்க்கட்சிகள் புறக்கணிக்கும் என்று கூறினார்.
வருத்தம் கேட்டால் பரிசீலனை
அப்போது பேசிய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி, சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்.பிக்கள் தங்களது செயலுக்கு வருத்தம் தெரிவித்தால், அவர்களை மீண்டும் அவைக்குள் அனுமதிப்பது பற்றி அரசு முடிவெடுக்கும் என்று தெரிவித்தார்.
எம்பிக்கள் வெளிநடப்பு
இதையடுத்து பேசிய வெங்கையா நாயுடு, ராஜ்யசபாவில் எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டது வருத்தமளிக்கிறது. என்றும் இந்த நடவடிக்கை எம்.பிக்களுக்கு எதிரானது அல்ல. அவர்களது செயல்பாடுகளுக்கு எதிரானது என்றார். ராஜ்யசபா துணைத்தலைவர் 13 முறை கேட்டுக் கொண்டு எம்.பிக்கள் தங்கள் இருக்கைகளுக்கு செல்ல மறுத்துள்ளனர். இது ஆரோக்கியமான விஷயமல்ல என்றும் கூறினார். இதனை ஏற்க மறுத்த காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட எதிர்கட்சி எம்.பிக்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
வெங்கையா நாயுடு வேண்டுகோள்
அப்போது பேசிய வெங்கய்ய நாயுடு எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அனைவரும் வெளிநடப்புச் செய்யும் முடிவை மறு பரிசீலனை செய்து அவை நடவடிக்கையில் பங்கேற்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். அதை ஏற்கும் மனநிலையில் எதிர்கட்சி எம்பிக்கள் இல்லை.
சஸ்பெண்ட் எம்எல்ஏக்கள் போராட்டம் வாபஸ்
ராஜ்யசபா காங்கிரஸ் எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத் பேசும் போது சஸ்பெண்ட் செய்யப்பட்ட 8 எம்.பி.க்கள் மீதான நடவடிக்கையை திரும்பப் பெறும்வரை அவைக்குள் வரப்போவதில்லை என்று தெரிவித்தார்.கூட்டத்தொடரைப் புறக்கணிக்கும் எதிர்க்கட்சிகளின் போராட்டத்தில் பங்கேற்கும் ராஜ்யசபாவில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட 8 எம்.பிக்களும் தங்களது போராட்டத்தை வாபஸ் பெற்றுக் கொண்டனர்.
லோக்சபா எதிர்கட்சியினர் வெளிநடப்பு
இதனிடையே பிற்பகலில் லோக்சபா கூடியதும் வேளாண் மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்தும் 8 ராஜ்யசபா எம்பிக்கள் மீதான நடவடிக்கையை திரும்ப பெறக்கோரியும் வெளிநடப்பு செய்தனர். எம்பிக்கள் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கையை திரும்ப பெறாவிட்டால் மழைக்கால கூட்டத்தொடரை புறக்கணிக்கப் போவதாகவும் தெரிவித்த எம்பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் அமர்ந்து பேசினர். இந்த சூழ்நிலையில் எதிர்கட்சி தலைவர்களுடன் சபாநாயகர் ஓம்.பிர்லா சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார்.