டெல்லி கலவரம்.. முதல்முறையாக மௌனம் கலைத்தார் அமித் ஷா.. பரபரப்பு குற்றச்சாட்டு
டெல்லி: குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக எதிர்க்கட்சிகள் தவறான தகவல்களை பரப்பி வகுப்புவாத கலவரத்தை தூண்டுகின்றன என்று டெல்லி வன்முறைக்கு பின்னர் முதல்முறையாக உள்துறை அமைச்சர் அமித் ஷா கருத்து தெரிவித்துள்ளார்.
வடகிழக்கு டெல்லியில் சிஏஏவுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும், சிஏஏ ஆதரவாளர்களுக்கும் இடையே கடந்த திங்கள்கிழமை மோதல் வெடித்தது.
இந்த மோதலில் இதுவரை 42 பேர் கொல்லப்பட்டனர். 200க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். டெல்லியின் சந்த்பாக், ஜாப்ராபாத் பகுதியில் பலர் வீடுகளை இழந்துள்ளனர். வாகன்ஙகள், கடைகள் தீ வைத்து எரிக்கப்பட்டன.
அமிஷ் ஷாவுக்கு நெருக்கடி
இந்த வன்முறை மிகப்பெரிய அளவில் நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. டெல்லி வன்முறையை போலீசார் தடுக்க தவறியதாகவும் குற்றச்சாட்டு உள்ளது. டெல்லி காவல்துறை உள்துறை அமைச்சகத்தின் கீழ் வருவதால் அமித் ஷாவுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இப்போது டெல்லியில் வன்முறை இல்லாமல் அமைதி நிலவினாலும் வன்முறைக்கு பொறுப்பேற்று அமித் ஷா தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என எதிர்க்கட்சிகள் நெருக்கடி கொடுத்தன. காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி தலைமையில் காங்கிரஸ் நிர்வாகிகள் நேற்று குடியரசுத் தலைவரை சந்தித்து அமித் ஷாவுக்கு எதிராக மனு அளித்தனர்.
கலவரத்தை தூண்டுறாங்க
இந்நிலையில் டெல்லி வன்முறை தொடர்பாக கடந்த ஐந்து நாட்களில் ஒருமுறை கூட தனது கருத்தை தெரிவிக்காமல் அமைதியாக இருந்து வந்த அமித் ஷா குடியுரிமைதிருத்த சட்டத்துக்கு ஆதரவாக இன்று நடந்த பேரணியில் மௌனம் கலைத்துள்ளார். குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக எதிர்க்கட்சிகள் கலவரத்தை தூண்டுகின்றன என்று குற்றம்சாட்டி உள்ளார்.
மக்கள் கேட்கணும்
இது தொடர்பாக அமித்ஷா கூறுகையில், புதிய குடியுரிமைச் சட்டத்தால் முஸ்லிம் மக்கள் குடியுரிமை இழக்க நேரிடும் என எதிர்க்கட்சிகள் தவறான தகவல்களை பரப்புகின்றன. வகுப்புவாதக் கலவரங்களைத் தூண்டுகின்றன. குடியுரிமை திருத்த சட்டத்தின் எந்த பிரிவு மக்களின் குடியுரிமையை பறிக்கும் என்பது குறித்து போராட்டத்தை தூண்டுபவர்களிடம் மக்கள் கேட்க வேண்டும்.
முஸ்லிம்களை பாதிக்காது
புதிய சட்டத்தின் காரணமாக எந்த இந்திய முஸ்லிமும் குடியுரிமையை இழக்க மாட்டார்கள். மத்தியில் ஆளும் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு, ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்த 370ஆவது பிரிவினை நீக்கி நாட்டின் பிற பகுதிகளுடன் ஒருங்கிணைத்து 70 ஆண்டுகளாக நீடித்த சிக்கலை தீர்த்துள்ளது" இவ்வாறு அமித் ஷா கூறினார்.