கொரோனா.. சோனியா காந்தி தலைமையில் ஆலோசனை.. ஸ்டாலின், திருமா உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் பங்கேற்பு
டெல்லி: நாட்டின் தற்போதைய நிலவரம் தொடர்பாக அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்களுடன் காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி வீடியோகான்பரன்ஸ் மூலம் ஆலோசனை நடத்தி வருகிறார்.
கொரோனா லாக்டவுன் 4-வது கட்டமாக அமல்படுத்தப்பட்டிருக்கிறது. கொரோனா லாக்டவுனால் நாட்டின் பொருளாதாரம் என்பதே முற்றாக முடங்கிப் போய்விட்டது.
கொரோனா லாக்டவுன் காலத்தில் இடம்பெயர் தொழிலாளர்கள் எதிர்கொண்டிருக்கும் பிரச்சனை ஒட்டுமொத்த நாட்டையே பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. இந்த தேசத்தின் ஆன்மாவாக கருதப்படும் தொழிலாளர்கள் ஒவ்வொரு நாளும் எதிர்கொள்ளும் பேரிடர் நெஞ்சை கனக்க செய்கிறது.
இந்த நிலையில் மத்திய அரசு, பொருளாதார மீட்புக்காக ரூ20 லட்சம் கோடி திட்டத்தை அறிவித்தது. ஆனால் இந்த ரூ20 லட்சம் கோடி திட்டம் பெரும் சர்ச்சையாகி உள்ளது. குறிப்பாக நாட்டின் அனைத்து பொதுத்துறை நிறுவனங்களும் தனியாருக்கு தாரை வார்க்கப்பட்டிருப்பது பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது.
இந்த நிலையில் நாட்டின் தற்போதைய சூழ்நிலை குறித்து விவாதிக்க அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்களின் ஆலோசனை கூட்டத்தை காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி கூட்டியுள்ளார். இந்த ஆலோசனைக் கூட்டம் இன்று மாலை 3 மணிக்கு வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் துவங்கியது.
இந்த நிலையில் பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் சோனியா தலைமையிலான ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்கவில்லை.
திமுக தலைவர் ஸ்டாலின், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், மஜத தலைவர் தேவகவுடா, இடதுசாரிகள் தலைவர் டி.ராஜா, விசிக தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றுள்ளனர்.
புதிய பணியிடம், அரசு நிதியில் வெளிநாட்டு டூர், விருது நிகழ்ச்சி..அத்தனைக்கும் தமிழக அரசு தடாலடி தடா