ஜனாதிபதியுடன் எதிர்க்கட்சித் தலைவர்கள் சந்திப்பு- குடியுரிமை சட்டத்தை நிறுத்தி வைக்க வலியுறுத்தல்!
டெல்லி: மத்திய அரசின் குடியுரிமை சட்டத்தை நிறுத்தி வைக்க வேண்டும்; போராடும் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்துவதை கைவிட வேண்டும் என ஜனாதிபதி ராம்நாத் கோவிந்திடம் எதிர்க்கட்சித் தலைவர்கள் கூட்டாக வலியுறுத்தினர்.
டெல்லியில் காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி தலைமையில் எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் ஒன்றாக சென்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்தனர். இச்சந்திப்பின் போது மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்தத்தை மக்கள் ஏற்கவில்லை என்பதால் திரும்பப் பெற வலியுறுத்தப்பட்டது.
இதன்பின்னர் செய்தியாளர்களிடம் சோனியா காந்தி கூறியதாவது:
வடகிழக்கு மாநிலங்களைத் தொடர்ந்து நாடு முழுவதும் நிலைமை மோசமாகி வருகிறது. போராடுகிற மாணவர்கள் மீது போலீசார் வன்முறையை கட்டவிழ்த்து விடுகின்றனர்.
டெல்லி ஜாமியா பல்கலைக் கழகத்துக்குள் நுழைந்து மாணவர்களை கொடூரமாக போலீசார் தாக்கியிருப்பது கண்டனத்துக்குரியது. மாணவிகளை விடுதிகளில் இருந்து இழுத்து வந்து தாக்கி உள்ளனர்.
ஆகையால் மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்தத்தை நிறுத்தி வைக்க வேண்டும் என ஜனாதிபதியிடம் வலியுறுத்தினோம். இவ்வாறு சோனியா காந்தி கூறினார்.
சோனியா காந்தி தலைமையில் திமுகவின் டி.ஆர். பாலு, ஆர்ஜேடியின் மனோஜ் குமார் ஜா, சிபிஐ பொதுச்செயலாளர் டி. ராஜா, சிபிஎம் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, திரிணாமுல் காங்கிரஸின் டெரெக் ஓ பிரைன் மற்றும் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்தனர். இதனிடையே பகுஜன் சமாஜ் கட்சியினர் நாளை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்திக்க உள்ளனர்.