பசியும் தெரியல.. நேரம் போனதும் தெரியல.. 3 மணி நேரம் அவையை தெறிக்கவிட்ட சபாநாயகர்
Recommended Video
டெல்லி: ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அனைவருக்கும் நீண்ட நேரம் வழங்கி மக்களவை சபாநாயகர் பிர்லா பேச வைத்து வருகிறார். நேற்ற பசியை மறந்து 3 மணி நேரம் அவையை நடத்தியதால் எதிர்க்கட்சிகள் வெகுவாக பாராட்டின.
பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு மீண்டும் ஆட்சி பொறுப்பேற்றதை தொடந்து 17வது மக்களவையின் முதல் கூட்டம் கடந்த வாரம் தொடங்கியது. 17வது மக்களவையின் சபாநாயகராக ராஜஸ்தான் மாநில பாஜக எம்பி ஓம் பிர்லா கடந்த 19ம் தேதி தேர்வு செய்யப்பட்டார்.. மக்களவை கூட்டத்தொடர் கடந்த 10 நாட்களாக சுமூகமாக நடந்து கொண்டிருக்கிறது.
10ம் நாளான நேற்று கேள்வி நேரத்தின் போது அவரவர் தொகுதி பிரச்சனைகள் குறித்து பேசுவதற்கு உறுப்பினர்களுக்கு சபாநாயகர் அனுமதி அளித்தார். இதில் ஒவ்வொரு உறுப்பினர்களும் தங்கள் தொகுதி பிரச்சனைகளை அவையில் எடுத்துவைத்து பதில் பெற்றனர். இதனால் நேற்று அவை எந்த பிரச்னையும் இல்லாமல் விறுவிறுப்பாக சென்றது. ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி என எந்த பாகுபாடும் காட்டாமல் அனைவருக்கும் நேரம் வழங்கி பேச வைத்தார்.
இந்த சூழலில் சபாநாயகர் திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர் சவுகதா ராயை பேசுவதற்கு அழைத்தார். அப்போது சவுகதா பேசுகையில், "சபாநாயகர் பசியை மறந்து தொடர்ந்து 3 மணி நேரம் அவையை தொடர்ந்து நடத்தி வருகிறார். வருங்கால தலைமுறையினருக்கு சபாநாயகர் எப்படி பணியாற்ற வேண்டும் என்பதற்கு எடுத்துக்கட்டாக விளங்குகிறார்" என்றார்.
அதன்பின்னர் பேசிய பாஜக எம்பி கோபால் ஷெட்டி, கேள்வி நேரத்தில் உறுப்பினர்கள் எழுப்பிய பிரச்னைகளுக்கு ஒரு மாதத்திற்குள் பதிலளிக்க வேண்டும் என சபாநாயகர் அறிவுறுத்தியது பாராட்டத்தக்கது என்றார்.
அனைவரும் சுவராஸ்யமாக அவையில் பேசிக்கொண்டு இருந்ததால் யாருக்கும் சாப்பாடு நேரம் போனதே நேற்று தெரியவில்லை. இதனால் அவை தொடர்ந்து 3 மணிநேரமும் எந்த இடையூறும் இல்லாமல் நடந்தது. பின்னர் பிற்பகல் 2.30 மணி அளவில் உணவு ஓய்வுக்காக அரை மணி நேரம் மட்டும் அவையை சபாநாயகர் ஓம் பிர்லா ஒத்திவைத்தார். பின்னர் அவை தொடர்ந்து நடந்தது.