ராஜ்யசபா எம்பிக்கள் சஸ்பெண்ட் - லோக்சபா கூட்டத்தையும் புறக்கணிப்பதாக எதிர்க்கட்சிகள் அறிவிப்பு
டெல்லி: ராஜ்யசபாவில் 8 எம்.பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு எதிராகவும் வேளாண் மசோதாக்களை மத்திய அரசு திரும்பப் பெற வலியுறுத்தியும் லோக்சபா கூட்டத்தையும் புறக்கணிப்பதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அறிவித்துள்ளன.
ராஜ்யசபாவில் வேளாண் மசோதாக்களை மரப்புப் படி விவாதிக்காமல் முறைகேடாக மத்திய அரசு நிறைவேற்றியது என்பது எதிர்க்கட்சிகளின் புகார். இதனால் ஞாயிற்றுக்கிழமையன்று ராஜ்யசபாவில் பெரும் அமளி ஏற்பட்டது.
சஸ்பெண்ட் செய்யப்பட்ட 8 ராஜ்யசபா எம்.பிக்களின் தர்ணா போராட்டம் வாபஸ்
ராஜ்யசபா எம்.பிக்கள் சஸ்பெண்ட்
இந்த அமளியைத் தொடர்ந்து திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. டெரிக் ஓ பிரெய்ன் உட்பட 8 எம்.பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இந்த 8 எம்.பிக்களும் தங்களது சஸ்பெண்ட் உத்தரவுக்கு எதிராக நாடாளுமன்ற வளாகத்தில் விடிய விடிய போராட்டம் நடத்தினர்.
ராஜ்யசபா புறக்கணிப்பு
இதனிடையே ராஜ்யசபா துணைத் தலைவர் ஹரிவன்ஷும் தாமும் ஒரு நாள் உண்ணாவிரதம் இருப்போம் என அறிவித்தார். இன்னொரு பக்கம், எம்.பிக்கள் சஸ்பெண்ட் உத்தரவை திரும்பப் பெறும் வரை ராஜ்யசபா நடவடிக்கைகளைப் புறக்கணிப்போம் என எதிர்க்கட்சிகள் கூட்டாக அறிவித்திருக்கின்றன.
லோக்சபாவில் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி
இந்நிலையில் லோக்சபாவில் காங். குழு தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி பேசுகையில், லோக்சபாவும் ராஜ்யசபாவும் இரட்டை குழந்தைகள்.. ஒரு சபையில் வருந்தத்தக்க நிகழ்வுகள் நடைபெற்றால் இன்னொரு சபைக்கும் வருத்தம் ஏற்படும். எங்களைப் பொறுத்தரவை வேளாண் மசோதாக்களை திரும்பப் பெற வேண்டும். மத்திய அரசு இந்த மசோதாக்களை திரும்பப் பெற்றால் சபையை தொடர்ந்து நடத்தலாம். இல்லை எனில் நாங்கள் சபை நடவடிக்கைகளை புறக்கணிக்கிறோம் என்றார்.
லோக்சபா நடவடிக்கைகள் புறக்கணிப்பு
இதற்கு நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரகால் ஜோஷி எதிர்ப்பு தெரிவித்தார். அவர் பேசுகையில், இன்னொரு சபை நிகழ்வுகளை மக்களவையில் விவாதிக்கக் கூடாது. இப்படி விவாதித்துக் கொண்டிருப்பது துரதிருஷ்டவசமானது என சுட்டிக்காட்டினார். இதனைத் தொடர்ந்து அனைத்து எதிர்க்கட்சிகளும் வேளாண் மசோதாக்களுக்கு எதிராகவும் 8 ராஜ்யசபா எம்.பிக்கள் மீதான நடவடிக்கையை கைவிட வலியுறுத்தியும் லோக்சபா கூட்டத்தைப் புறக்கணித்தன.