சி.ஏ.ஏ-க்கு எதிராக டெல்லியில் நாளை எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம்- மமதா, மாயாவதி பங்கேற்க மறுப்பு
டெல்லி: மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக டெல்லியில் நாளை எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி, பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி ஆகியோர் பங்கேற்க போவது இல்லை என அறிவித்துள்ளனர்.
குடியுரிமை சட்ட திருத்தம், என்.ஆர்.சி. ஆகியவற்றுக்கு எதிராக நாடு முழுவதும் நாள்தோறும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதனைத் தொடர்ந்து காங்கிரஸ், இடதுசாரிகள், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்த போராட்டத்தை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளன.
இதற்கான ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் நாளை நடைபெற உள்ளது. ஆனால் இக்கூட்டத்தில் தாம் பங்கேற்க போவதில்லை என மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில், சி.ஏ.ஏ, என்.ஆர்.சி.க்கு எதிராக முதன் முதலில் போராட்டத்தை தொடங்கியது நான்தான். ஆனால் காங்கிரஸும் இடதுசாரிகளும் சி.ஏ.ஏ..,என்.ஆர்.சி பெயரால் வன்முறைகளை கட்டவிழ்த்துவிட்டனர். ஆகையால் எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூடத்தில் பங்கேற்க போவதில்லை என கூறியுள்ளார்.
இதேபோல் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி, காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியஙாவை கடுமையாக விமர்சித்திருந்தார். கோட்டாவில் உயிரிழந்த குழந்தைகளின் பெற்றோரை காங்கிரசின் பெண் பொதுச்செயலரான பிரியங்கா காந்தி பார்க்க செல்லவில்லை என சாடியிருந்தார்.
மமதா, மாயாவதி பங்கேற்காத நிலையில் நாளை நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்த போராட்டத்தை அறிவிக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுக்கிறது.