மீண்டும் ஒன்றுகூடும் எதிர்க்கட்சித் தலைவர்கள்.. இன்று செய்தியாளர்கள் சந்திப்பு.. முக்கிய அறிவிப்பு?
டெல்லியில் இன்று எதிர்கட்சிகளை சேர்ந்த முக்கிய தலைவர்கள் எல்லோரும் ஒன்றாக செய்தியாளர்களை சந்திக்க இருக்கிறார்கள்.
டெல்லி: டெல்லியில் இன்று எதிர்கட்சிகளை சேர்ந்த முக்கிய தலைவர்கள் எல்லோரும் ஒன்றாக செய்தியாளர்களை சந்திக்க இருக்கிறார்கள்.
லோக்சபா தேர்தல் நெருங்கிவிட்டது. ஏப்ரல் 11ம் தேதி பல இடங்களில் லோக்சபா தேர்தல் நடக்கிறது. இதற்கு இன்னும் சரியாக இரண்டு வாரங்கள் மட்டுமே இருக்கிறது. தமிழகத்தில் ஏப்ரல் 18ம் தேதி தேர்தல் தொடங்க உள்ளது.
இந்த லோக்சபா தேர்தலுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட முக்கிய எதிர்க்கட்சிகள் எல்லாம் சேர்ந்து பெரிய கூட்டணி அமைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்படி பெரிய கூட்டணி எதுவும் எங்கும் அமையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் எதிர்க்கட்சிகளுக்கு இடையே சிறிய பிளவு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில்தான் தற்போது டெல்லியில் இன்று எதிர்கட்சிகளை சேர்ந்த முக்கிய தலைவர்கள் எல்லோரும் ஒன்றாக செய்தியாளர்களை சந்திக்க இருக்கிறார்கள். காங்கிரஸ் சார்பாக இதில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அல்லது காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் ஆகியோர் கலந்து கொள்ள வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இந்த சந்திப்பில் பணமதிப்பிழப்பு நடவடிக்கை குறித்து எதிர்க்கட்சிகள் இன்று பேசுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் பின்புலம் குறித்து எதிர்க்கட்சிகள் எல்லோரும் சேர்ந்து பேசுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்காக கடந்த 4 நாட்களாக எதிர்க்கட்சிகள் எல்லோரும் ஆலோசனையும் செய்து வந்தனர். அந்த ஆலோசனையின் முடிவாக தற்போது இந்த செய்தியாளர் சந்திப்பு நடக்க இருக்கிறது என்று கூறுகிறார்கள். இதில் மிக முக்கியமான அறிவிப்புகள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.