காஷ்மீரில் ஜனாதிபதி ஆட்சியை நீட்டிக்க எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு- அமித்ஷா மீது பாய்ச்சல்
டெல்லி: ஜம்மு காஷ்மீரில் ஜனாதிபதி ஆட்சியை மேலும் 6 மாதத்துக்கு நீட்டிக்கும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் தீர்மானத்துக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
ஜம்மு காஷ்மீரில் ஜனாதிபதி ஆட்சி மேலும் 6 மாதம் நீட்டிக்கப்படும்; இந்த ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடத்தப்படும் என்று லோக்சபாவில் அமைச்சர் அமித்ஷா தெரிவித்தார். மேலும் ஜம்மு காஷ்மீரில் எல்லை கட்டுப்பாட்டு கோட்டில் இருந்து 10 கி.மீ சுற்றளவில் வசிப்போருக்கு இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவையும் அமித்ஷா தாக்கல் செய்தார்.
இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இடதுசாரி கட்சியைச் சேர்ந்த கொல்லம் பிரேமச்சந்திரன், லோக்சபா தேர்தலை ஜம்மு காஷ்மீரில் அமைதியாக நடத்த முடிகிறது. அப்படியானால் ஏன் சட்டசபை தேர்தலை அங்கு அமைதியாக நடத்த முடியாது? என கேள்வி எழுப்பினார்.
மேலும், எல்லைக் கட்டுப்பாட்டு கோடு அருகே வசிக்கும் மக்களின் வாக்குகளை குறிவைத்தே இடஒதுக்கீட்டை அறிவித்துள்ளது மத்திய அரசு எனவும் அவர் சாடினார். காங்கிரஸ் கட்சியின் எம்.பி. மணீஷ் திவாரியும் ஜனாதிபதி ஆட்சியை நீட்டிக்க எதிர்ப்பு தெரிவித்தார்.
அவர் பேசுகையில், பஞ்சாப், காஷ்மீரில் பிரச்சனைகளுக்கு காரணம் பாகிஸ்தான். காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் 1996-2002-ல் தேசிய மாநாட்டு கட்சி ஆட்சியை நடத்தியது. அடுத்த தேர்தலில் காங்கிரஸ்- பிடிபி அரசு அமைதியை உருவாக்கியது.
ஆனால் தத்துவார்த்த ரீதியாக எதிர் எதிர் கட்சிகளான பாஜகவும் பிடிபியும் ஆட்சி அமைக்க முயன்று தற்போது ஜனாதிபதி ஆட்சி அமைக்க காரணமாகிவிட்டன. ஜம்மு காஷ்மீரத்து மக்களை தனிமைப்படுத்தும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. அவர்களை தேசத்தின் நீரோட்டத்தில் இணைக்க வேண்டிய கடமை மத்திய அரசுக்கு உள்ளது. நாங்கள் இடஒதுக்கீட்டை எதிர்க்கவில்லை. ஆனால் தேர்தல் நடைபெறும் சூழல் இடஒதுக்கீடு அறிவிப்பபை வெளியிடக் கூடாது என்கிறோம் என்றார்.
இதன் பின்னர் பேசிய பாஜக எம்.பி. பூனம் மகாஜன், காஷ்மீரின் லால் சவுக்கில் தேசிய கொடியை ஏற்றியவர் பிரதமர் மோடி. மோடியும் அவரது அரசும் ஜம்மு காஷ்மீரை தேசத்துடன் முழுமையாக இணைக்க முயற்சிக்கிறது. சர்தார் வல்லபாய் படேலுக்கு பிறகு எந்த ஒரு எதிர்ப்பும் இல்லாமல் வரவேற்கப்பட்ட உள்துறை அமைச்சர் அமித்ஷாதான். ஜம்மு காஷ்மீரத்து மக்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணியை விரும்புகின்றனர். மோடியின் தலைமையில் தேசத்தின் எதிர்காலம் சிறப்பாக இருக்கும் என நம்பிக்கை வைத்துள்ளனர் என்றார்.