அரசை எதிர்த்தால் நாங்கள் தேசவிரோதிகளா.. ஊபா சட்டத்துக்கு எதிராக கர்ஜித்த மஹுவா மொய்த்ரா
டெல்லி: தேசிய பாதுகாப்பு உள்ளிட்ட விஷயங்களில் அரசாங்கத்துடன் உடன்படாவிட்டால் எதிர்க்கட்சிகளை தேச விரோதிகள் என்று பட்டம் கொடுத்து அழைக்கிறார்கள் என திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா குற்றம்சாட்டினார்.
சட்டவிரோத செயல்கள் தடுப்புத் திருத்தச் சட்ட மசோதா லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது, இந்த மசோதா குறித்து இன்று விவாதம் நடந்தது அப்போது திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா பேசுகையில், "இந்த மசோதா கூட்டாச்சிக்கு எதிரானது. அரசியல் அமைப்புக்கு எதிரானது.மக்களுக்கு எதிரானது.
தேசப்பாதுகாப்பு உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக அரசுடன் உடன்படவில்லை என்றால் ஒவ்வொரு முறையும் தேச விரோதி என்று மத்திய அரசால் எதிர்க்கட்சிகள் அழைக்கப்படுகிறார்கள்.
தேச பாதுகாப்பு விவாரங்களில் அரசுடன் உடன்படாமல் விமர்சிக்கும் எதிர்க்கட்சிகளுக்கு எதிராக மத்திய அரசு "கிண்டல் செய்யும் குழுவை' ஏவி விடுகிறது. ஆனால் அரசை எதிர்த்தால் அதை எப்படி தேச விரோதமாக பார்க்கப்பட முடியும், அரசை எதிர்த்தாலும், இந்த தேசத்தை நேசிக்க முடியும், ஆதரிக்க முடியும் என்றார்.
மஹுவா இவ்வாறு பேசியதற்கு பாஜகவின் எஸ்எஸ் அலுவாலியா கண்டனம் தெரிவித்தார். சபையில் உறுப்பினர்கள் குற்றச்சாட்டை உறுதிப்படுத்தாமல் இப்படி அரசுக்கு எதிராக பேசுவது சரியல்ல என்றார். அப்போது குறுக்கிட்ட நாடாமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர் ராம் மேக்வால், ஆளும் அரசு ஒரு காலத்திலும் யாரையும் தேசவிரோதி என்று சொன்னதில்லை என்ற விளக்கம் அளித்தார்.
அப்போது அவைக்கு தலைமை வகித்த மீனாக்ஷி லோகி எம்பி, எந்தவொரு உறுப்பினரும் அறிவிப்பை வழங்காமல் மற்றொருவருக்கு எதிராக அவதூறான அறிக்கையை வெளியிட முடியாது என்றார். இதையடுத்து விளக்கம் அளித்த மஹுவா , எனது பேச்சு தவறான பிரச்சாரத்திற்கு எதிரானது, தனி மனிதருக்கு எதிரானது அல்ல என்றார்.