தூள் கிளப்பும் ஓபிஎஸ்.. நிர்மலா சீதாராமனையும் இன்று சந்தித்தார்.. திக் திக்கில் ஈபிஎஸ் முகாம்!
டெல்லி: டெல்லியில் தமிழக துணை முதல்வரும் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளருமான ஓபிஎஸ்-சின் கை ஓங்கி வருகிறது. இதனால் ஈபிஎஸ் தரப்பு கலக்கம் அடைந்துள்ளது. தன்னை சந்திக்க மறுத்த நிர்மலா சீதாராமனையும் ஓராண்டு கழித்து சந்தித்துள்ளார் ஓபிஎஸ்.
நேற்று முன்தினம் கட்சிக்காரர்களுக்கு கூட தெரிவிக்காமல் திடீரென்று டெல்லிக்கு கிளம்பி சென்றார் ஓபிஎஸ். அங்கு சென்றவர் நேரடியாக அமித்ஷாவை சென்று சந்தித்தார். ஓபிஎஸ் தர்மயுத்தம் நடத்தி அதிமுகவில் இருந்து வெளியேறியது அதன் பின்னர் நினைத்த நேரமெல்லாம் ஒரு பிரதமரை சென்று சந்தித்து வந்தது இதெல்லாம் பார்ப்பவர்களுக்கு ஆச்சரியத்தை அளித்தாலும் அதன் பின்னர்தான் ஓபிஎஸ்-சை இயக்கியதே பாஜகதான் என்பது தெரிய வந்தது. இதை ஓபிஎஸ் -ம் நேரடியாக ஒப்புக்கொண்டார்.
பாஜக கூறியதால்தான் அதிமுகவில் இணைந்தேன் என்று. இந்த நிலையில் கட்சியின் தலைமைப் பீடத்துக்கு ஓபிஎஸ் கொண்டு வரப்பட்டார். ஆட்சியின் தலைமைக்கு ஈபிஎஸ் கொண்டு வரப்பட்டார். இதன் பின்னர் ஈபிஎஸ் கேட்கும் நேரமெல்லாம் பிரதமரும் அப்பாயின்மென்ட் கொடுத்து வந்தார். ஈபிஎஸ் மோடியுடன் நெருங்கிய பின்னர் ஓபிஎஸ்-ன் செல்வாக்கு கொஞ்சம் கொஞ்சமாக குறைய ஆரம்பித்தது. இதனால் செயவதறியாது திகைத்து வந்தார் ஓபிஎஸ்.
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் அதிமுக சார்பில் தனது மகன் ஒற்றை நபராக வெற்றி பெற்ற பின்னரும் அவருக்கு மத்திய அமைச்சர் பதவி வாங்க முடியாமல் ஓபிஎஸ் தவித்து வருகிறார். ஒரு அமைச்சர் பதவி தருகிறோம் என்று பாஜக கூறிய பின்னரும் அதை வாங்க விடாமல் ஈபிஎஸ் தரப்பு முட்டுக்கட்டை போட்டு வருகிறது என்பதில் ஓபிஎஸ்-க்கு மிகுந்த மன வருத்தம் உண்டு.
இந்த நிலையில் சட்டசபை கூட்டத்தொடர் முடிவடைந்ததும் நேரே சென்று டெல்லிக்கு பிளைட் பிடித்த ஓபிஎஸ் பாஜக தலைவர் அமித்ஷாவை சந்தித்து பேசியுள்ளார். அப்போது அவரது சிகிச்சை, வேலூர் தேர்தல் ஆகியவவை தொடர்பாக பேசியதாக செய்திகள் வெளியானது ஆனால் நடந்ததே வேறு என்கிறார்கள் ஓபிஎஸ் ஆதரவாளர்கள். ஓபிஎஸ்-சை வைத்து அமித்ஷா பலே பிளான் ஒன்றை போட்டுள்ளார். அதாவது ஓபிஎஸ் - க்கு தமிழகத்தை தாண்டி கேரளா, தெலுங்கானா வரை அவரது எல்லையை விரித்து அவருக்கென்று சில அசைன்மென்ட்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இதை ஓபிஎஸ் வெற்றிகரமாக முடிக்கும் பட்சத்தில் அவருக்கு முதல்வர் பதவி தேடிவருவதற்கான சாத்தியக் கூறுகள் உள்ளன என்றும் கூறப்பட்டுள்ளது.
இது ஒருபுறம் என்றால் அதிமுகவை பொறுத்தமட்டில் எடப்பாடி பழனிசாமி மோடியின் குட்புக்கில் இருந்தாலும் அமித்ஷாவின் குட்புக்கில் ஓபிஎஸ் தான் இருந்து வருகிறார். அதோடு நேற்று நடைபெற்ற சந்திப்பில் அமித்ஷாவே கட்சியில் தனக்கு அடுத்தபடியாக செல்வாக்கு மிக்க நபரான பாஜகவின் செயல்தலைவரான நட்டாவை அவருக்கு அறிமுகப்படுத்தி சில முக்கிய விசயங்களை அவருடன் கலந்து பேசியுள்ளார். அதோடு தமிழகம், தெலுங்கானா, கேரளா ஆகிய மூன்று மாநிலங்களில் விரைவில் நட்டா சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார் இது குறித்தும் ஓபிஎஸ் - உடன் ஆலோசிக்கப்பட்டுள்ளது.
இது எடப்பாடி தரப்புக்கு கிலியை ஏற்படுத்தியுள்ளது. பாஜகவின் அதிகார மையமாக திகழும் அமித்ஷா மற்றும் அவருக்கு அடுத்தபடியாக உள்ள நட்டாவுடனும் ஓபிஎஸ் ஐக்கியமாகிவிட்டார் என்பதால் தங்களுக்கு எதிராக அவர் காய் நகர்த்த கூடும் என்று எடப்பாடி தரப்பு நினைக்கிறதாம்.
இப்படியாக டெல்லியில் தனது செல்வாக்கை பலப்படுத்தி வரும் ஓபிஎஸ் கடந்த வருடம் ஜூலை மாதம் 23 ம் தேதி அப்போதைய பாதுகாப்புத் துறை அமைச்சரும் தற்போதைய நிதியமைச்சருமான நிர்மலா சீதாராமனை சந்திக்க அனுமதி கேட்டிருந்தார்.
அனுமதி அளிக்கப்பட்டிருந்த நிலையில் தனது சகோதரருக்கு ராணுவ ஹெலிகாப்டரை கொடுத்து உதவியதற்காக நன்றி தெரிவிக்கவே டெல்லி வந்துள்ளேன் என்று ஓபிஎஸ் மீடியாக்களிடம் கூறியது நிர்மலாவுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் ஒரு மாநலத்தின் துணை முதலமைச்சர் என்றும் பாராமல் அவரை சந்திக்காமலே திருப்பி அனுப்பி விட்டார். இது கடும் விமர்சனத்திற்குள்ளானது. ஆனால் ஓபிஎஸ் -ன் இந்த டெல்லி விசிட்டில் சரியாக ஓராண்டுக்குப் பின்னர் அதே ஜூலை மாதத்தில் ஒரு நாள் முன்னதாக 23ம் தேதி சந்தித்துப் பேசியுள்ளார்.
ஒரே விசிட்டில் பாஜக தலைவர் அமித்ஷா, செயல்தலைவர் நட்டா, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோரை ஓபிஎஸ் சந்தித்து பேசியது எடப்பாடி தரப்பில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அமித்ஷா கொடுத்த அசைன்மென்ட்டை ஓபிஎஸ் வெற்றிகரமாக முடிக்கும் பட்சத்தில் அது ஈபிஎஸ் க்கு கடுமையான பாதிப்பை உருவாகும் என்று கூறுகிறார்கள் டெல்லி விவரம் அறிந்தவர்கள்.