அதிமுகவுக்கு இருப்பது ஒரே ஒரு எம்.பி... முதல்வரை வரவேற்க அவரும் வரவில்லை.. டெல்லியில் சலசலப்பு
டெல்லி: அதிமுகவுக்கு இருக்கும் ஒரு எம்.பி.யும் டெல்லியில் முதல்வரை வரவேற்க வரவில்லையாம். இதுசலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக நேற்று மாலை சென்னையிலிருந்து விமானம் மூலம் டெல்லி சென்றார். அவரை தமிழகத்தில் இருந்து அதிமுக சார்பில் தேர்வு செய்யப்பட்ட ஒரே ஒரு எம்.பி.யும் வரவேற்க வரவில்லை.
17 வது மக்களவை அமைந்த பிறகு பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக்கின் முதல் கூட்டம் இன்று நடைபெற்றது இதில் கலந்து கொள்ள அனைத்து மாநில முதல்வர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று டெல்லி சென்றார்.
ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது டெல்லி செல்வது என்பதே அரிதான சம்பவம். அப்படி அவர் டெல்லி செல்கிறார் என்றால் விமான நிலையத்தில் இருந்து தமிழ்நாடு இல்லம் வரை, அதிமுக தொண்டர்கள் குவிந்து விடுவார்கள். அவரைச் சந்திக்க மத்திய அமைச்சரவையின் மூத்த அமைச்சர்களே முயற்சிப்பார்கள்.
மேடத்திடம் அப்பாயின்ட்மென்ட் கிடைக்குமா? என கேட்டு காத்திருப்பார்கள். இப்போதைய மத்திய அமைச்சரும், தமிழக பாஜக பொறுப்பாளருமான பியுஸ் கோயலே மின்துறை அமைச்சராக இருந்தபோது உதய் மின்திட்டம் தொடர்பாக பேச பலமுறை அப்பாயின்மென்ட் கேட்டும் கிடைக்கவில்லை என்று பகிரங்கமாகவே கூறியிருந்தது நினைவிருக்கலாம். ஆனால் அதே கட்சியின் தலைவர்களை ஒரு ஹோட்டலில் அழைத்து கூட்டணி பேசிய கதையும் இதே தமிழகத்தில்தான் அரங்கேறியது. சரி விசயத்துக்கு வருவோம்.
மத்திய அமைச்சர்கள் மட்டுமல்லாது பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், தொழில்அதிபர்கள், பலதுறைகளைச் சேர்ந்த நிபுணர்கள் ஜெயலலிதாவின் அப்பாயின்ட்மென்டுக்காக காத்திருப்பார்கள். எத்தனையோ குற்றச்சாட்டுகள், ஊழல் வழக்குகள் இருந்தாலும் டெல்லியில் ஜெயலலிதாவின் செல்வாக்கு எந்தவிதத்திலும் குறைந்தது இல்லை. முதல்வர்கள் ஆலேசனைக் கூட்டம் நடைபெறுகிறது என்றாலும் ஜெயலலிதாவுக்கு தனி மரியாதை இருந்தே வந்தது.
ஆயிரமாயிரம் குற்றசாட்டுகள் தன் மீது இருந்தபோதும் மாநில உரிமைகளை அவர் யாருக்காகவும், எந்த கொம்பனுக்காகவும் அவர் விட்டுக் கொடுக்காதது ஒரு காரணமாக இருக்கலாம். இப்படி தமிழக முதல்வர் ஒருவர் தனது ஆதிக்கத்தை செலுத்திய டெல்லியில் நேற்று தமிழக முதல்வர் சென்றபோது சொந்த கட்சியில் இருந்து தேர்வான ஒரு எம்.பியும் அவரை வரவேற்க வரவில்லை.
வழக்கமாக முதல்வர் டெல்லி செல்கையில் அவரை அதிமுகவைச் சார்ந்த எம்.பி.க்கள் விமான நிலையத்தில் வரவேற்பது மரபு. நாடாளுமன்றம் நடைபெறாத நாட்களில் கூட முதல்வர் டெல்லி சென்றால், தமிழகத்தில் இருந்தாலும் அதிமுக எம்.பி.க்கள் டெல்லி சென்று வரவேற்று அவருடன் அன்றைய தினம் முழுவதும் இருப்பார்கள்.
நேற்று டெல்லி சென்ற முதல்வர் எடப்பாடி பழனிசாமியை மக்களவை முன்னாள் துணை சபாநாயகர் தம்பிதுரை, மாநிலங்களவை உறுப்பினர் வைத்திலிங்கம், தமிழக அரசின் டெல்லி பிரதிநிதி தளவாய் சுந்தரம் ஆகியோர் பூங்கொத்து அளித்து வரவேற்றனர். இவர்களோடு அவரை தமிழகத்தில் இருந்து அதிமுகவுக்கு தேர்வு செய்யப்பட ஒரே ஒரு எம்.பி வருவார் வழி விடலாம் என்று காத்திருந்த அதிமுகவினர் ஏமாந்து போயினர்.
இது குறித்து முதல்வரின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் "தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி புதுடில்லி வருகை புரிந்த போது, விமான நிலையத்தில் புதுடில்லிக்கான தமிழக அரசின் சிறப்பு பிரதிநிதி, முன்னாள் மக்களவை துணைத் தலைவர் மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் ஆகியோர் வரவேற்றனர்" என்று குறிப்பிடப் பட்டுள்ளது. முதல்வரை மாநிலங்களவை உறுப்பினர்களும் பிற நிர்வாகிகளும் வரவேற்ற நிலையில் துணை முதல்வர் ஓபிஎஸ் ன் மகனும் அதிமுகவின் ஒரே ஒரு மக்களவை உறுப்பினருமான ரவீந்திரநாத் வரவேற்க செல்லாதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.