மதுரையில் மத்திய தமிழ் பல்கலைக்கழகம்... ஓ.பி.எஸ். மகன் புதிய கோரிக்கை
டெல்லி: மதுரையில் மத்திய தமிழ் பல்கலைக்கழகத்தை அமைக்க வேண்டும் என தேனி மக்களவை உறுப்பினரும் ஓ.பி.எஸ். மகனுமான ரவீந்தரநாத் குமார் நாடாளுமன்றத்தில் கோரிக்கை வைத்துள்ளார்.
மத்திய சமஸ்கிருத பல்கலைக்கழகங்கங்கள் அமைக்கும் வகையில் புதிதாக கொண்டு வரப்பட்ட மசோதாவை ஆதரித்து பேசிய ரவீந்தரநாத், தமிழுக்கும் மத்திய பல்கலை. வேண்டும் என பேசியுள்ளார்.
இதன் மூலம் கழுவுகிற மீனில் நழுவுகிற மீனைப் போல் அவர் நாடாளுமன்றத்தில் நடந்துகொண்டதாக விமர்சிக்கின்றனர் திமுக எம்.பி.க்கள்.
ஓ.பி.எஸ். மகன் ஆதரவு
மத்திய சமஸ்கிருத பல்கலைக்கழகங்களை புதிதாக நிறுவ வழிவகை செய்யும் வகையில் நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட மசோதாவை ஓ.பி.எஸ். மகன் ஆதரித்ததுடன், சமஸ்கிருதத்தை நேசிக்கிறேன், தமிழை காதலிக்கிறேன் என்ற பஞ்ச் டயலாக் எல்லாம் பேசினார். மேலும், அதோடு விட்டிருந்தால் பரவாயில்லை, தமிழை போல் சமஸ்கிருதமும் தொண்மையான மொழி என சர்டிஃபிகேட் அளித்தார்.
மதுரையில் பல்கலை.
மேலும், சமஸ்கிருதம் தொடர்பாக தனது புகழுரையை முடித்துவிட்டு இறுதியாக ஒரு கோரிக்கை வைத்தார். அது என்னவென்றால், சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரை மண்ணில், மத்திய தமிழ் பல்கலைக்கழகத்தை நிறுவ வேண்டும் என்பது தான். இந்த கோரிக்கையை வைத்துவிட்டு சமஸ்கிருத பல்கலைக்கழகம் தொடர்பான மசோதாவை ஆதரித்தார்.
நழுவுகிற மீன்
அதிமுக மக்களவை உறுப்பினர் ரவீந்தரநாத் குமாரின் செயல்பாடுகளும், நடவடிக்கைகளும் கழுவுகிற மீனில் நழுவுகிற மீனைப் போலவே இருக்கும் என்றும், மத்திய அரசுக்கு எதிராக ஒரு வார்த்தைக் கூட இதுவரை அவர் தப்பித்தவறிக் கூட பேசியதில்லை எனவும் விமர்சிக்கின்றனர் திமுக எம்.பி.க்கள்.
துணைக்கு திமுக
இந்த மசோதாவை ஆதரித்து பேசிய ரவீந்தரநாத்குமார், தமிழை வளர்க்க எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, கருணாநிதி போன்ற தலைவர்கள் அரும்பாடுபட்டனர் எனவும் புகழாரம் சூட்டினார். இதைக்கேட்ட திமுக எம்.பி.க்கள் பலர், நீங்க சமஸ்கிருத மசோதாவை ஆதரிப்பதற்கு எங்க தலைவரை ஏன் துணைக்கு அழைக்கிறீர்கள் என எதிர்ப்புகாட்டினர்.