பிரதமர்னா வேற மாதிரி இருக்கனும்.. மோடி பிரதமரை மாதிரியே நடந்து கொள்வதில்லை.. ராகுல் காந்தி அட்டாக்
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ராகுல் காந்தி ஆகியோரின் பதிலடி பேச்சுக்கள் தொடர்பாக லோக்சபாவில் இன்று பெரும் சலசலப்பு ஏற்பட்டது. ராகுல் காந்தி குறித்து பிரதமர் நரேந்திர மோடி 'டியூப்லைட்' என்று குறிப்பிட்டு நேற்று லோக்சபாவில் பேசியிருந்தார்.
டெல்லி பிரச்சாரத்தின்போது, வேலைவாய்ப்பு கிடைக்காத இளைஞர்கள் பிரதமர் மோடியை கம்பால் அடிப்பார்கள் என்று, ராகுல் காந்தி பேசியிருந்ததை மறைமுகமாக சாடி, மோடி இப்படி பேசினார்.
ராகுல் காந்தி கூறிய வார்த்தையை கண்டிப்பதாக லோக்சபாவில் இன்று, அமைச்சர் ஹர்ஷ் வர்த்தன் பேசினார். இதை காங்கிரஸ் எம்பிக்கள் எதிர்த்து கோஷமிட்டனர். மாணிக்கம் தாக்கூர் மற்றும் ஹர்ஷவர்த்தன் இடையே மோதல் சூழல் உருவானது. இந்த நிலையில்தான், அவை நடவடிக்கை பாதித்ததால், நாள் முழுக்க லோக்சபா ஒத்திவைக்கப்பட்டது.
இதனிடையே, ராகுல் காந்தி நாடாளுமன்றத்தின் வெளியே நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: ஒரு பிரதமருக்கு சிறப்பு அந்தஸ்து உண்டு, பிரதமர் பதவியில் இருப்போர்களுக்கு தனி குணாதிசியம் மற்றும் பண்பு உள்ளது, ஆனால் நமது பிரதமருக்கு இந்த விஷயங்கள் இல்லை. அவர் பிரதமரைப் போல நடந்து கொள்வதில்லை.
வயநாட்டில் மருத்துவக் கல்லூரி இல்லை என்ற பிரச்சினை பற்றி நான் சபையில் பேச விரும்பினேன். நான் பேசியிருந்தால், பாஜக அதை விரும்பியிருக்காது. பாராளுமன்றத்தில் பேச எங்களுக்கு அனுமதி இல்லை. லோக்சபாவில் பதிவான வீடியோவைப் பாருங்கள் மாணிக்கம் தாகூர் (காங்கிரஸ் எம்.பி.) யாரையும் தாக்கவில்லை, ஆனால் அவர்தான் தாக்கப்பட்டார்.
புதிய வரலாறு எழுதப்பட்டுள்ளது.. தேசிய நீரோட்டத்திற்கு வரவேற்கிறேன்.. அசாமில் மோடி உற்சாக உரை
இன்று நாடாளுமன்றத்தில் திட்டமிடப்பட்ட கலாட்டா நடத்தப்பட்டது. அரசிடம் கேள்வி கேட்பதைத் தடுக்க இந்த கலாட்டா வடிவமைக்கப்பட்டுள்ளது. வேலையின்மை நெருக்கடியை எவ்வாறு சமாளிப்பது என்பது குறித்து பிரதமருக்கு எந்த ஐடியாவும் இல்லை என்பதை இந்திய இளைஞர்கள் தெளிவாகக் காணலாம். மோடியை பாதுகாக்க, பாஜக நாடாளுமன்ற நேரத்தை சீர்குலைத்து, விவாதத்தைத் தடுக்கிறது. இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்தார்.