அயோத்தியில் ராமர் கோயில் கட்ட அவசர சட்டம் கிடையாது: மோடி திட்டவட்ட அறிவிப்பு
டெல்லி: நீதிமன்ற நடவடிக்கைகள் முடிவடைந்த பிறகே, அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவது தொடர்பாக முடிவெடுக்க முடியும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி பிரத்யேக பேட்டியளித்துள்ளார். அப்போது பல்வேறு வகை கேள்விகளுக்கும் மோடி பதிலளித்தார்.
அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவது தொடர்பான கேள்விக்கு பதிலளித்து அப்போது, மோடி கூறியதாவது: அரசியல் சாசனத்திற்கு உட்பட்டுதான் ராமர் கோயில் விவகாரத்தில் முடிவெடுப்போம் என்று பாஜக தேர்தல் அறிக்கையிலேயே கூறியிருந்தோம்.
லோக் சபா தேர்தல் மக்களுக்கும் எதிர்கட்சிக்கும் இடையில்தான்.. மெகா கூட்டணி பற்றி மோடி விமர்சனம்!
நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. நீதிமன்ற நடவடிக்கைகள் முடிவடைந்த பிறகு, ஒரு அரசாக என்ன கடமையை செய்யவேண்டுமோ அதை செய்வோம். எல்லா வகை முயற்சியையும் செய்ய நாங்கள் தயாராக உள்ளோம் என்றார்.
ராமர் கோயில் கட்டுவது தொடர்பாக மத்திய அரசால் ஏன் அவசர சட்டம் கொண்டுவர முடியாது? முத்தலாக் விவகாரத்தில் அவசர சட்டம் கொண்டு வந்தீர்களே என்ற கேள்விக்கு பதிலளித்த மோடி, "முத்தலாக் அவசர சட்டம் என்பது உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு பிறகு கொண்டுவரப்பட்டது. அயோத்தி விஷயம் அப்படியானது கிடையாது.
கடந்த 70 வருடங்களாக ஆட்சியில் இருந்தவர்கள் அயோத்தி ராமர் கோயில் விவகாரத்தில் தங்களால் முடிந்த தீர்வை காண முயற்சி செய்துள்ளனர். ஆனால், நீதியின் வழியில் தடைகளை ஏற்படுத்தாமல் இருந்திருக்க வேண்டும். அப்படியிருந்திருந்தால், நீதிமன்றமே ஒரு முடிவுக்கு வந்திருக்கும்.
தேசத்தின் அமைதிக்காகவும், ஒற்றுமைக்காகவும், நான் காங்கிரசை கேட்டுக்கொள்வதெல்லாம், தயவு செய்து, உங்களது வழக்கறிஞர்களை வைத்து, அயோத்தி விவகாரத்தில் நீதிமன்ற தலையீடுகளை மேற்கொள்வதை நிறுத்திக்கொள்ளுங்கள். நீதிமன்றம் விரைவாக தீர்ப்பு வழங்க காங்கிரஸ் வழக்கறிஞர்கள் உதவ வேண்டும். இவ்வாறு மோடி தெரிவித்தார்.
அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் விவகாரம் தாமதமாவதற்கு சங் பரிவார் அமைப்புகள் அதிருப்தி தெரிவித்திருந்த நிலையிலும், அயோத்தி விஷயத்தில், அவசர சட்டம் வராது என மோடி கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.