உயிர் துறந்த 135 பேர்.. நாட்டை உலுக்கிய குஜராத் பால விபத்து! ஒப்பந்ததாரருக்கு 7 நாள் போலீஸ் கஸ்டடி
குஜராத் மோர்பி பால விபத்தில் ஒரேவா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஜெய்சுக் பட்டேலை 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறைக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கி இருக்கிறது
டெல்லி: குஜராத் மோர்பி தொங்கு பாலம் அறுந்து விழுந்து 135 பேர் பலியான சம்பவம் நாட்டையே உலுக்கிய நிலையில், இந்த விபத்து தொடர்பாக பாலத்தை பராமரிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு இருந்த ஒரேவா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஜெய்சுக் பட்டேலை 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறைக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கி இருக்கிறத்
குஜராத் மாநிலம் மோர்பி பகுதியில் மச்சு ஆற்றின் குறுக்கே ஆங்கிலேயர் காலத்தில் அமைந்து அமைக்கப்பட்டது மோர்பி தொங்கு பாலம். வரலாற்று சின்னமாக குஜராத் மக்களால் அது பார்க்கப்பட்டு வந்தது.
சுமார் 140 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட இந்த பழமையான கேபிள் பாலத்தில் கடந்த ஆண்டு புனரமைப்பு பணிகள் நடைபெற்றன. கடந்த ஆண்டு இந்த பணிகள் முடிந்து மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து விடப்பட்டது.
தாக்கம் ஏற்படுத்தாத மோர்பி பாலம் விபத்து.. குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் முன்னிலை
அலைமோதிய மக்கள் கூட்டம்
1.25 மீட்டர் அகலம், 235 மீட்டர் நீளம் கொண்ட இந்த மோர்பி தொங்கு பாலம் மீண்டும் திறக்கப்பட்ட பிறகு குஜராத் மாநிலத்தின் முக்கிய சுற்றுலாத்தளமாக உருவெடுத்தது. இங்கு அதிகளவிலான மக்கள் வார இறுதி நாட்கள், விடுமுறை நாட்களில் வருகை தந்தனர். குறிப்பாக கடந்த தீபாவளி பண்டிகை நாட்களில் பொதுமக்களின் வருகை அதிகமாக காணப்பட்டது.
அறுந்து விழுந்த பாலம்
இந்த நிலையில்தான் கடந்த ஆண்டும் அக்டோபர் மாதம் இறுதியில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை காரணமாக ஏராளமான மக்கள் கூட்டம் மோர்பி பாலத்திற்கு வந்தது. குழந்தைகள், சிறுவர்கள், பெண்கள், இளைஞர்கள் என பலதரப்பட்ட மக்கள் கூட்டம் கூட்டமாக பாலத்தில் நின்றுகொண்டு இருந்தனர்.
135 பேர் உயிரிழப்பு
நிர்ணயிக்கப்பட்ட எடையை மீறி பாலத்தில் அதிகளவிலான மக்கள் நின்றதால் பாலத்தின் முக்கிய கேபிள் எடை தாங்காமல் அறுந்து விழந்தது. இதனால் பாலத்தில் நின்ற மக்கள் நதியில் விழுந்தனர். அவர்களில் சிலர் நீச்சல் அடித்து தப்பி வந்துவிட்டனர். ஆனாலும் குழந்தைகள், பெண்கள் உட்பட 135 பேர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
அலட்சியம்
இந்தியா உட்பட உலகம் முழுவதும் இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மாநில அரசு மற்றும் பாலத்தை பராமரிக்க ஒப்பந்தம் எடுத்த ஒரேவா நிறுவனத்தின் அலட்சியம் காரணமாகவே இந்த விபத்து நிகழ்ந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. குறிப்பாக டிக்கெட்டுக்கு அதிக பணம் பெற்றுக்கொண்டு நிர்ணயிக்கப்பட்ட கூட்டத்தை விட அதிகமான அளவு பாலத்தில் மக்களை அனுமதித்ததால் எடை தாங்காமல் பாலம் அறுந்து விழுந்துவிட்டதாக கூறப்படுகிறது.
உண்மை கண்டறியும் குழு
இந்த பாலம் அறுந்த விபத்துக்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும், இதுகுறித்து தீவிர விசாரணை நடத்த 5 பேர் கொண்ட உண்மை கண்டறியும் குழு அமைக்கப்பட்டது. இந்த விபத்து தொடர்பாக உடனடியாக 9 பேரை காவல்துறை கைது செய்து விசாரணை மேற்கொண்டது. பிரதமர் நரேந்திர மோடி குஜராத் சென்றிருந்த நேரத்தில் நடந்த இந்த விபத்து அம்மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
7 நாள் போலீஸ் காவல்
இந்த நிலையில் பாலத்தை பராமரிக்க ஒப்பந்தம் எடுத்திருந்த ஒரேவா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஜெய்சுக் பட்டேலிடம் விசாரணை நடத்த நீதிமன்றத்தில் சிறப்பு விசாரணை குழு அனுமதி கோரியது. வழக்கை விசாரித்த தலைமை மாஜிஸ்திரேட் எம்.ஜே.கான் 7 நாள் ஜெய்சுக் பட்டேலை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்தார். இந்த வழக்கில் 10 வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டு உள்ள ஜெய்சுக் பட்டேல் தாக்கல் செய்த முன் ஜாமின் மனுவை நீதிமன்றம் ஏற்கனவே நிராகரித்தது.
முன் ஜாமின் நிராகரிப்பு
இதன் காரணமாக அவருக்கு 14 நாட்கள் ரிமாண்ட் வழங்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது. நீதிமன்றத்தில் ஜெய்சுக் பட்டேலை ஆஜர்படுத்தும்போது அங்கு நின்றிருந்த பொதுமக்கள் மற்றும் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் அவருக்கு எதிராக முழக்கமிட்டனர். இதுகுறித்து அரசு தரப்பு வழக்கறிஞர் வோரா கூறுகையில், "பட்டேலின் ஒரேவா நிறுவனம்தான் இந்த விபத்திற்கு முழு காரணம்." என்றார்.