சபரிமலை உத்தரவுக்கு எதிரான செயல்பாடுகளை அனுமதிக்க முடியாது.. நீதிபதி நாரிமன் கண்டிப்பு
Recommended Video
டெல்லி: சபரிமலை விவகாரத்தில், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை அனைவரும் மதிக்க வேண்டும், அமைப்பாக சேர்ந்து கொண்டு நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக செயல்படுவதை அனுமதிக்க முடியாது என்று நீதிபதி ஆ.ர்எப்.நாரிமன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள், அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று கோரி தொடரப்பட்ட வழக்கில், கடந்த 2018ஆம் ஆண்டு செப்டம்பரில், அப்போதைய தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 5 நீதிபதிகள் அமர்வு தீர்ப்பு வழங்கியது.
நீதிபதி இந்து மல்கோத்ராவைத் தவிர நான்கு நீதிபதிகள் சபரிமலை கோவிலுக்குள், அனைத்து வயது பெண்களையும், அனுமதிக்கலாம் என்று தீர்ப்பு வழங்கி இருந்தனர்.
சபரிமலை: கடந்த முறை மாறுபட்ட தீர்ப்பு வழங்கிய நீதிபதி இந்து மல்கோத்ரா.. இப்போது பெரும்பான்மை பக்கம்
சீராய்வு மனு
நீதிபதிகள் நாரிமன், சந்திரசூட், கன்வில்கர், மற்றும் அப்போதைய தலைமை நீதிபதி, தீபக் மிஸ்ரா ஆகிய, இந்த பெஞ்சில் அங்கம் வகித்த பிற 4 நீதிபதிகளும், அனைத்து வயது பெண்களும் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் செல்லலாம் என தீர்ப்பு வழங்கினர். இந்த நீதிபதிகள் அமர்வு குழுவில் இடம்பெற்றிருந்த நாரிமன், சந்திரசூட், கன்வில்கர், இந்து மல்கோத்ரா ஆகிய நால்வரும், இந்த தீர்ப்பை எதிர்த்து தொடரப்பட்ட சீராய்வு மனு மீதான விசாரணை அமர்விலும் இடம் பெற்றிருந்தனர்.
7 நீதிபதிகள் அமர்வு
தற்போதைய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு இன்று தனது தீர்ப்பை வழங்கியது. நாரிமன் மற்றும் சந்திரசூட் ஆகிய இருவருமே ஏற்கனவே உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு அமல்படுத்தப்பட வேண்டும் என்றும், சீராய்வு மனு தள்ளுபடி செய்யப்பட வேண்டும் என்றும் தீர்ப்பு வழங்கினர். ஆனால் ரஞ்சன் கோகாய் இந்து மல்ஹோத்ரா மற்றும் கல்வில்கர் ஆகிய மூன்று நீதிபதிகளும், 7 நீதிபதிகள் அடங்கிய பெரிய பெஞ்ச் இந்த வழக்கை விசாரிக்க வேண்டும் என்று தீர்ப்பு வழங்கினார் இதையடுத்து 7 நீதிபதிகள் அமர்வுக்கு வழக்கு அனுப்பப்பட்டு உள்ளது.
நீதிபதி கண்டிப்பு
அதேநேரம் நீதிபதி நாரிமன் தனது தீர்ப்பில், சபரிமலை கோவிலுக்குள், அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்காமல் நடத்தப்பட்ட போராட்டங்களுக்கு அதிருப்தி வெளிப்படுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு என்பது அனைவரையும் கட்டுப்படுத்தக்கூடியது. அதை தங்கள் விருப்பத்துக்கு எடுத்துக்கொள்ள முடியாது. தீர்ப்பு என்பது கட்டாய நடவடிக்கை. அரசியல் சாசனத்தின் மாண்பை நிறைவேற்றுவதற்கு, அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அமைப்பாக இணைந்துகொண்டு நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக செயல்படுவதை அனுமதிக்க முடியாது. இவ்வாறு அவர் தெரிவித்தார். 7 நீதிபதிகள் பெஞ்சுக்கு சீராய்வு மனு அனுப்பப்பட்டாலும், ஏற்கனவே பிறப்பித்த தீர்ப்பின்படி, பெண்களை கோவிலுக்குள் அனுமதிக்க வேண்டும் என்பது நீதிமன்ற தீர்ப்பாகும்.
போராட்டங்கள்
2018 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் சபரிமலைக்கு அனைத்து வயது பெண்களும் சென்று வழிபடலாம் என்று தீர்ப்பு வழங்கி இருந்த போதிலும் கூட சில அமைப்பினர் இணைந்து கொண்டு, தரிசனத்திற்கு சென்ற பெண்களை கோவிலுக்குள் அனுமதிக்காமல் திருப்பி அனுப்பிவிட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பான சூழ்நிலை நிலவியது. இதைக் குறிப்பிட்டுத்தான் தற்போது நீதிபதி கடுமையான வார்த்தைகளில் தீர்ப்பில் குறிப்பிட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.