5 கோடி சிறுபான்மையின மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்க திட்டம்.. மத்திய அரசு தகவல்
டெல்லி: வரும் ஐந்தாண்டுகளில் சுமார் 5 கோடி சிறுபான்மையின மாணவர்களுக்கு, கல்வி உதவித் தொகை வழங்க திட்டமிட்டுள்ளதாக மத்திய சிறுபான்மை நலத்துறை அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி தகவல் கூறியுள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய மத்தியமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி, மத்திய அரசு நீதி மற்றும் நம்பகத்தன்மையுடன் செயல்படுவதை நிரூபித்துள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் சாதிகளை அடிப்படையாக வைத்து செயல்பட்டு வரும் பகுஜன் சமாஜ் மற்றும் சமாஜ்வாதியை கட்சிகளை சிறுபான்மையின மக்கள் நிராகரித்துள்ளதாக கூறினார்.
மத வாதத்தை அகற்றி அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை சாத்தியமாக்க வேண்டும் என்பதே மத்திய அரசின் இலக்கு. நாட்டில் கல்வி கட்டமைப்பில்லாத பகுதிகளில் ஜன் விகாஸ் கார்யக்ரம் திட்டத்தின் கீழ், பள்ளி, கல்லூரிகள், தகவல் தொழில்நுட்ப உண்டு உறைவிட பள்ளிகள், பொது சேவை மையங்கள் ஆகியவை அமைக்கப்பட்டு வருகின்றன
நாடு முழுவதிலும் உள்ள மதரசாக்களில் இந்தி, ஆங்கிலம், கணிதம் உள்ளிட்ட பாடங்களையும் கற்றுத் தர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறினார். இதன் மூலம் மதரசாவில் கல்வி கற்கும் மாணவர்கள் பொது வெளியில் செயல்பட வாய்ப்பு ஏற்படும் என்றார். மேலும் மத்திய மாநில அரசுகள் நடத்தும் வேலைவாய்ப்பு தேர்வுகளில் பங்கேற்க விரும்பும் , பொருளாதாரத்தில் பின்தங்கிய சிறுபான்மையின பிரிவை சேர்ந்தவர்களுக்கு பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டு வருகிறது.
பாதியில் படிப்பை நிறுத்திய சிறுபான்மையின மாணவர்களுக்கு, மீண்டும் கல்வி கிடைக்க வழிவகை செய்யப்பட்டு, அதன் மூலம் அவர்களுக்கான வேலைவாய்ப்பு உறுதி செய்யப்படும். நாடு முழுவதும் கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்தி கல்வி கற்பதை ஊக்குவிக்க மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது.
குறிப்பாக சிறுபான்மையின சமூக பெண் குழந்தைகளின் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் நாடு முழுவதும் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது என்றார்.
இத்திட்டத்திற்காக அடுத்து வரும் ஐந்து ஆண்டுகளில் சுமார் 5 கோடி சிறுபான்மை மாணவர்களுக்கு, கல்வி உதவித் தொகை வழங்க தீவிர ஏற்பாடுகளில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளதாக கூறினார். மேற்கண்ட 5 கோடி சிறுபான்மையின மாணவர்களில் 50 சதவீதம் பேர், அதாவது 2.5 கோடி பேர் மாணவிகள் ஆவர் என மத்திய அமைச்சர் குறிப்பிட்டார்.