மிக் 17 ஹெலிகாப்டரை நமது ஏவுகணைதான் தவறுதலாக தாக்கிவிட்டது- விமான படை தளபதி ஆர்கே சிங் பகதூரியா
Recommended Video
டெல்லி: ஜம்மு காஷ்மீர் எல்லையில் விமானப் படைக்கு சொந்தமான மிக் 17 ஹெலிகாப்டரை நமது ஏவுகணைதான் தவறுதலாக தாக்கிவிட்டது என விமானப் படை தளபதி ஆர்.கே.சிங் பகதூரியா தெரிவித்துள்ளார்.
கடந்த பிப்ரவரி 26-ந் தேதியன்று பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் உள்ளிட் அந்நாட்டின் உட்பகுதிகளில் நுழைந்து இந்திய ராணுவம் அதிரடித் தாக்குதலை நடத்தியது. இதில் பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
இத்தாக்குதலின் போது விமானப் படைக்கு சொந்தமான மிக் 17 ரக ஹெலிகாப்டர் ஏவுகணை தாக்குதலால் விழுந்து நொறுங்கியது. இது தொடர்பாக பல்வேறு குழப்பங்கள் நீடித்து வந்தது.
நமது ராணுவமும் விசாரணைக்கு உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் விமானப் படை தளபதி ஆர்.கே.சிங் பகதூரியா கூறியதாவது:
பிப்ரவரி 27-ந் தேதி மிக் 17 ரக ஹெலிகாப்டரை நமது ஏவுகணைதான் தவறுதலாக தாக்கிவிட்டது. இது தொடர்பான அனைத்து விசாரணைகளும் முடிவடைந்துவிட்டன.
இதில் தவறு செய்த 2 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இது மிகப் பெரிய தவறு. இதுபோன்ற தவறுகள் இனி எதிர்காலத்தில் நடைபெறாத வகையில் இருப்போம்.
நமது பகுதிக்குள் பாகிஸ்தானின் குட்டி விமானங்கள் ஆயுதங்களை வீசி செல்கின்றன. இது வான்பரப்பு கட்டுப்பாட்டு விதிகளை மீறுவதாகும். இதற்கு உரிய பதிலடி கொடுக்கப்படும்.
எல்லையில் பாகிஸ்தானின் பயங்கரவாதம் தொடர்ந்தால் பால்கோட் போன்ற தாக்குதல்கள் குறித்து அரசு முடிவு எடுத்தால் அதனடிப்படையில் நாம் செயல்படுவோம். இவ்வாறு ஆர்.கே.சிங் பகதூரியா கூறினார்.