அலறியடித்து ஓடும் வெளிநாட்டு முதலீடுகள்.. புது உச்சம்.. மோடி அரசின் செயல்பாடு காரணமா?
டெல்லி: இந்திய மார்க்கெட்டுகளில் இருந்து வெளியேறும் வெளிநாட்டு நிதி 2018ம் ஆண்டு புது உச்சத்தை தொட்டுள்ளது. நரேந்திர மோடி அரசின் பொருளாதார கொள்கைகள், ரிசர்வ் வங்கி மீதான ஆதிக்கம் போன்றவை முதலீட்டாளர்களை வெளியேற்ற முக்கிய காரணமாக கூறப்படுகிறது.
2008ம் ஆண்டு உலக பொருளாதார மந்தநிலையின்போது, இந்தியாவில் இருந்து வெளிநாட்டு முதலீடுகள் வெளியேற்றம் அதிகமாக இருந்தது. 41,216 கோடி ரூபாய் மதிப்புக்கு முதலீடுகள் வெளியேறின. ஆனால், 2018ம் ஆண்டு, பொருளாதார நிலை சீராக இருந்தும்கூட, அதை விட இரு மடங்கு அதிகபட்சமாக வெளிநாட்டு நிதி வெளியேறியுள்ளது அதிர்ச்சியின் உச்சம்.
2018ம் ஆண்டில், ரூ.80, 919 கோடி மதிப்புள்ள வெளிநாட்டு முதலீடுகள் வெளியேறியுள்ளன.
கடந்த வருடம் வருகை
பங்குச் சந்தையில் இருந்துதான் பெரும்பாலான முதலீடுகள் வெளியேறியுள்ளன. இதன் மதிப்பு ரூ.52,987 கோடி. ஆனால் 2017ம் ஆண்டு, முதலீடு வருகை என்பது 2 லட்சம் கோடியாக இருந்தது. அமெரிக்காவுடனான வட்டி விகித மாறுபாடு, அமெரிக்க பங்குச் சந்தையில் கிடைக்கும் உயர் ரிட்டர்ன், நிதி நெருக்கடி போன்றவை இதற்கு முக்கிய காரணமாகும்.
அப்படியும், இப்படியும்
2014ம் ஆண்டு மோடி அரசு பதவிக்கு வந்தபோது, ரூ.2,56,213 என்ற அளவில் வெளிநாட்டு முதலீட்டு வரவு இருந்தது. இதுதான் உச்சபட்ச வெளிநாட்டு முதலீட்டு வரவு நிலை ஆகும். ஆனால், மோடி ஆட்சி காலம் முடிவடைவதற்குள், வெளியே செல்லும் முதலீடுகள்தான் உச்சம் தொட்டுள்ளன என்பது மோசமான போக்காக பார்க்கப்படுகிறது.
சிதம்பரம் கணிப்பு
ஆங்கில பத்திரிகையொன்றுக்கு இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் "பொருளாதார குறியீடுகளை கவனிக்கும் எந்த ஒரு நடுநிலையாளரும், புதிதாக இந்தியாவில் முதலீடு செய்ய முன்வரமாட்டார்கள். ஏற்கனவே முதலீடு செய்திருந்தால், அதில் ஒரு பகுதியை எடுத்துவிடுவார்கள். அதுதான் இப்போது நடக்கிறது. புதிய அரசு பதவிக்கு வரும்வரை இந்த நிலைதான் தொடரும். இந்திய மக்களுக்கு கொடுக்கப்படும் அரசியல் மெசேஜ் இதுதான்". இவ்வாறு சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
ரிசர்வ் வங்கி
பல்வேறு பொருளாதார நிபுணர்களும், ரிசர்வ் வங்கி போன்ற தன்னாட்சி அமைப்புகள் மீது மத்திய அரசு தொடர்ந்த தாக்குதல்கள்தான், பொருளாதார அச்ச நிலைக்கு காரணம் என்று கூறுகிறார்கள். இப்போதுள்ள மத்திய அரசு, வெளிநாட்டு முதலீடு வெளியேற்றம் குறித்து அக்கறைபடவில்லை என்கிறார் சர்வதேச நாணய நிதியக (ஐஎம்எப்) பொருளாதார வல்லுநர் ஒருவர்.
சீராக இருக்க வேண்டும்
சிதம்பரம் மேலும் கூறுகையில், மத்திய அரசு எப்போது என்ன பொருளாதார கொள்கையை அறிவிக்குமோ என்ற பதற்ற நிலை நீடிக்கிறது. சீரான தன்மை கிடையாது. அடிக்கடி கொள்கைகள் மாற்றப்படுகின்றன. 2019ம் ஆண்டு லோக்சபா தேர்தலை மனதில் வைத்துதான், இப்போதே முதலீடுகள் வெளியேறத் தொடங்கியுள்ளன என்று எச்சரிக்கிறார்.