போராட்டத்தில் பங்கேற்ற 100 விவசாயிகள் எங்கே...மனிதஉரிமை கழகத்தில் புகார்
டெல்லி : டெல்லியில் ஜனவரி 26 அன்று நடைபெற்ற போராட்டத்தில் கலந்து கொள்ள சென்ற நூற்றுக்கும் அதிகமான விவசாயிகள் காணாமல் போய் உள்ளதாக பஞ்சாப் மனித உரிமை கழகத்திடம் பல அரசுசாரா அமைப்புகள் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
குடியரசு தினத்தன்று டெல்லியில் விவசாயிகள் செங்கோட்டையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இந்த சம்பவத்திற்கு பிறகு 100 க்கும் அதிகமான விவசாயிகளை காணவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. டில்லி சீக்கிய குருத்வாரா நிர்வாகக் குழு, கல்ரா மிஷன். பன்தி தல்மல் சங்காதன் போன்ற அமைப்புக்கள் பஞ்சாப் மனித உரிமை கழகத்திடம் முறையிட்டுள்ளன.
வன்முறையில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டவர்களையும் விடுதலை செய்ய வேண்டும் என டில்லி போலீசையும் மனித உரிமைகள் கழகம் கேட்டுக் கொண்டுள்ளது. செங்கோட்டையில் வன்முறையில் ஈடுபட்டதாக 18 பேர் மட்டுமே கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
விவசாயிகள் விரும்பினால்... பேச்சுவார்த்தை நடத்த பிரதமர் ரெடி.. பிரகலாத் ஜோஷி உறுதி!
இந்த 18 பேரில் 7 பேர் பங்கி நிகல் சிங் கிராமத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்துள்ளது. இவர்கள், குடியரசு தினத்தன்று நடக்கும் பேரணியில் பங்கேற்பதற்காக ஜனவரி 23 ம் தேதி, கிராமத்தில் இருந்து புறப்பட்டுள்ளனர். 11 பேர் நங்லோவ் போலீசாரால் கைது செய்யப்பட்டு, திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கைது செய்யப்பட்டவர்களில் பெரும்பாலானோர் மீது பொது சொத்துக்களை சேதப்படுத்தியது, பண்டைய நினைவுச் சின்னங்கள், தொல்பொருள் தளங்களை அவமதித்தது, தொற்று நோய்கள் தடுப்பு சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மாயமான விவசாயிகள் குறித்த பட்டியலை விவசாய சங்கங்கள் தர வேண்டும் எனவும். போராட்டத்தில் பங்கேற்றவர்கள் திரும்பி விட்டார்களா என உறுதி செய்ய வேண்டும் எனவும் பாரதிய கிசான் அமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது.