50 வயசுக்கு மேல இருக்குற 78000 பிஎஸ்என்எல் ஊழியர்கள் இன்று ஒரே நாளில் விருப்ப ஓய்வு
டெல்லி: இந்தியாவின் மிகப்பெரிய அரசு பொதுத்துறை நிறுவனமாக பிஎஸ்என்எல் நிறுவனத்தில் பணியாற்றி வந்த சுமார் 78 ஆயிரம் பேர் இன்று ஒரே நாளில் ஓய்வு பெறுகிறார்கள். இதனால் அந்த நிறுவனத்தில் பணியாற்ற உள்ள ஊழியர்கள் எண்ணிக்கை பாதியாக குறைந்துள்ளது. 50வயதுக்கு மேல் உள்ள பலரும் விருப்ப ஓய்வு வாங்கி விடை பெற்றுள்ளனர்.
இந்தியாவில் தொலைத்தொடர்பு சேவை மழை, புயல் என்று பார்க்காமல் அர்ப்பணிப்புடன் அளித்து வரும் நிறுவனம் பிஎஸ்என்எல், நீங்கள் எந்த மலையிலோ அல்லது காட்டிலோ பயணம் மேற்கொண்டாலும் பிஎஸ்என்எல் டவர் உங்களுக்கு கிடைக்கும். அல்லது சேவைகள் கிடைக்கும். இப்படி ஒரு சேவையை அளித்த நிறுவனம் இன்று மெல்லமெல்ல கரைந்து வருகிறது.
தொலைத்தொடர்பு துறை தனியாருக்கு திறந்துவிடப்பட்டதால் பிஎஸ்என்எல் நிறுவனமும் அதன் ஒன்றரை லட்சம் ஊழியர்களும் வேலையில் மெல்ல மெல்ல சிக்கலை சந்திக்க ஆரம்பித்தனர். இப்போது பெரிய அளவில் நிதிச்சிக்கலை பிஎஸ்என்எல் நிறுவனம் எதிர்கொண்டுள்ளது.
துப்பாக்கி சூட்டை கண்டித்து போராடிய ஜாமியா பல்கலை மாணவர்கள் கைது.. குண்டுகட்டாக தூக்கிய போலீஸ்
விருப்ப ஓய்வு
இதனால் அந்த நிறுவனம் நிதிச்சிக்கலை சமாளிக்க முடியாமல், 50 வயதை கடந்த ஊழியர்கள் விருப்ப ஓய்வு கோரி ஊழியர்கள் விண்ணப்பிக்கலாம் என்று கடந்த நவம்பர் 4ம் தேதி அறிவித்தது. இதன்படி மொத்தம் உள்ள 1.50 லட்சம் பிஎஸ்என்எல் ஊழியர்களில், சுமார் ஒரு லட்சம் ஊழியர்கள் வரும் டிசம்பர் 3ம் தேதிக்கு விருப்ப ஓய்வு கோரி விண்ணப்பிக்கலாம் என்றும் பிஎஸ்என்எல் அறிவித்து இருந்தது.
இன்றுடன் ஓய்வு
சுமார் 75 ஆயிரம் ஊழியர்கள் விருப்ப ஓய்வு கேட்பார்கள் என்று பிஎஸ்என்எல் நிறுவனம் எதிர்பார்த்தது. ஆனால் எதிர்பார்ப்புக்கு மாறாக 78 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஓய்வு கேட்டு விண்ணப்பித்துள்ளனர். இது மொத்தம் உள்ள ஊழியர்களில் சுமார் பாதி அளவு ஆகும். இந்நிலையில் விருப்ப ஓய்வு கேட்டு விண்ணபித்துள்ள ஊழியர்கள் அனைவரும் இன்றுடன் (ஜனவரி 31ம் தேதியுடன்) பணி ஓய்வு பெறுகிறார்கள்.
சம்பளம் மிச்சம்
சுமார் 80 ஆயிரம் ஊழியர்கள் விருப்ப ஓய்வு கேட்டு விண்ணப்பித்தால் சுமார் 7000 கோடி சம்பள பில் மிச்சமாகும் என்று நினைத்து தான் பிஎஸ்என்எல் நிறுவனம் விருப்ப ஓய்வு திட்டத்தை அறிவித்தது. அதன்படி விருப்ப ஓய்வு பெறுவோருக்கு மிகப்பெரிய அளவில் கணிசமான ஊக்கத்தொகையும் ஓய்வுத்தொகையும் கிடைக்க உள்ளது.ஆனால் அவர்கள் வேலை பார்த்தால் கிடைக்கும் ஊதியம் கிடைக்கும் வாய்ப்பு இல்லை
விரும்ப காரணம்
விருப்ப ஓய்வை பிஎஸ்என்எல் ஊழியர்கள் விரும்ப காரணம், மாத ஊதியங்கள் பிஎஸ்என்எல்லில் தாமதமாக வழங்கப்பட்டு வந்தது முக்கிய காரணமாக சொல்கிறார்கள். அத்துடன் வேலை இருக்குமா, இருக்காதா என்ற அச்சம் அத்துடன், அரசு சொல்லும் போது அனைத்து பணபலன்களையும் வாங்கிக்கொண்டு நிம்மதியாக இருந்துவிடலாம். இல்லாவிட்டால் அதை வாங்குவது கடினமாக இருக்கும் என்று பலர் நினைத்திருக்க வாய்ப்பு உள்ளது என்றும் சொல்கிறார்கள் நீண்ட கால அடிப்படையில் பார்த்தால் பிஎஸ்என்எல் ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு என்பது பெரும் நஷ்டம் என்கிறார்கள்.