பீகாரை போல ஓவைசி கட்சியால் ஆதாயம் அடைய நினைத்த பாஜகவின் 'ஹைதராபாத் கனவு' டமால்!
டெல்லி: பீகார் சட்டசபை தேர்தலில் ஓவைசி கட்சி வாக்குகளைப் பிரித்ததால் கணிசமான இடங்களில் வெல்ல முடிந்ததைப் போல ஹைதராபாத் மாநகராட்சி தேர்தலிலும் ஜெயித்துவிடலாம் என்ற பாஜகவின் கனவு தகர்ந்து போய்விட்டது.
ஹைதராபாத் மாநகராட்சிக்கான ஒற்றை தேர்தலை ஒரு சட்டசபை, லோக்சபா தேர்தல் போல கையாண்டது பாஜக. பாஜகவின் மூத்த தலைவர்களான உள்துறை அமைச்சர் அமித்ஷா, உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் என பெரும் படைபரிவாரங்களை இறக்கியது பாஜக.
ஹைதராபாத்தில் பேசிய யோகி ஆதித்யநாத், மாநகராட்சி தேர்தலில் பாஜக வெல்லும்; ஹைதராபாத் பெயரையே பாக்யா நகர் என மாற்றுவோம் என்றார். அமித்ஷாவோ, ஹைதரபாத் மேயர் பதவி பாஜகவுக்குதான்; நிஜாம் கலாசாரத்தில் இருந்து ஹைதராபாத்தை மீட்போம் என முழங்கினார்.
ஹைதராபாத் தேர்தல் இவிஎம் முறையில் நடக்கலை.. வாக்கு சீட்டுதான்.. 'அப்படியும்' மண்ணை கவ்விய காங்கிரஸ்
எதிர்க்கட்சிகள் தனித்து போட்டி
பாஜகவின் இந்த திடமான நம்பிக்கைக்கும் ஒரு காரணம் இருந்தது. இந்த முறை ஹைதராபாத் மாநகராட்சி தேர்தலில் ஆளும் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி (டி.ஆர்.எஸ்), ஓவைசியின் மஜ்லிஸ் கட்சி, காங்கிரஸ் ஆகியவை தனித்தனியே களம் கண்டன. கடந்த மாநகராட்சி தேர்தலில் டி.ஆர்.எஸ்-ம் ஓவைசி கட்சியும் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொண்டு ஹைதராபாத் மாநகராட்சியை கைப்பற்றி இருந்தன.
பீகார் ரிசல்ட்
ஊர் இரண்டுபட்டால் பாஜகவுக்கு கொண்டாட்டம் என்பதை பீகாரில் அனைவரும் பார்த்தோம். பீகாரில் ஓவைசியின் மஜ்லிஸ் கட்சி தனித்து நின்று ஆர்ஜேடி-காங்கிரஸ்-இடதுசாரி கூட்டணியின் ஆட்சி கனவுக்கு ஆப்பு வைத்தது. ஹைதராபாத்திலும் ஓவைசி கட்சி தனித்தே நிற்பதால் தங்களுக்குத்தான் ஆதாயம் என கனவு கண்டது பாஜக.
பாஜகவுக்கு எதிரானது
ஆனால் தேர்தல் முடிவுகளோ பூமராங் போல பாஜகவை ஹைதராபாத்தில் பதம் பார்த்துவிட்டது ஓவைசி கட்சி. பீகாரில் தனித்துப் போட்டியிட்டு காங்கிரஸுக்கு தர்ம அடி கொடுத்தது ஓவைசி கட்சி. அதனால் பாஜகவின் பி டீம் என்கிற விமர்சனத்துக்குள்ளானது ஓவைசி கட்சி.
பாஜகவின் டீம் அல்ல
இந்த விமர்சனத்துக்கு பதில் தரும் வகையில் ஹைதராபாத்தில் பாஜகவின் வெற்றி கனவுக்கு கொள்ளி வைத்திருக்கிறது ஓவைசி கட்சி. களத்தில் நிற்பது யாராக இருந்தாலும் அடி கொடுக்க தயங்கமாட்டோம்.. அது காங்கிரஸா இருந்தா என்ன பாஜகவா இருந்தா என்ன என விளையாடிவிட்டது ஓவைசி கட்சி. இதன் மூலம் தங்கள் மீதான பாஜகவின் பி டீம் கறையை துடைத்துக் கொண்டிருக்கிறது ஓவைசி கட்சி.
கோடாலியால் அடி கொடுத்த ஓவைசி
இன்னொரு பக்கம், ஓவைசி கட்சியை நம்பி வெற்றி மிதப்பில் இருந்த பாஜகவின் பேராசை நிராசையாகிப் போனது. கடந்த முறையை விட இம்முறை கூடுதல் இடம்பெற்றிருக்கிறோம் என்கிற வகையில்தான் ஆறுதல் அடையலாம் பாஜக. தபால் வாக்குகளில் முன்னிலையில் இருந்தபோதே இந்தா பாக்யா நகர் என இப்பவே மாற்றிவிடுவோம் என்கிற பாஜகவின் கொக்கரிப்புக்கு கோடாலி கொண்டு அடி கொடுத்திருக்கிறது ஓவைசி கட்சி என்பதுதான் களநிலவரம்.