7 நாளில் தடுப்பூசி ரெடி... மத்திய அரசுக்கு 200 ரூபாய், வெளியே 1000 ரூபாய்.... அதிரடி காட்டும் சீரம்
டெல்லி: மத்திய அரசு சிறப்பு விலையாக 200 ரூபாய்க்கு தடுப்பூசி விற்பனை செய்யப்படும் என்று சீரம் நிறுவனத்தின் சிஇஓ ஆதார் பூனவல்லா தெரிவித்துள்ளார்.
பிரிட்டனைச் சேர்ந்த ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் அஸ்ட்ரா செனகா நிறுவனத்துடன் இணைந்து கொரோனா தடுப்பூசியை உருவாக்கினர்.
இந்த தடுப்பூசியைக் குறைந்த விலையில் உற்பத்தி செய்யலாம் என்பதால், இதன் மீது தொடக்கம் முதலே உலகெங்கும் எதிர்பார்ப்பு நிலவியது.
உலகின் மிகப்பெரிய கொரோனா தடுப்பூசி திட்டம் விரைவில் இந்தியாவில் தொடக்கம்... பிரதமர் மோடி அறிவிப்பு
சீரம்
இந்தியா உள்ளிட்ட வளரும் நாடுகளுக்குத் தேவையான ஆக்ஸ்போர்ட் தடுப்பூசியை உற்பத்தி செய்யவும் அதை விநியோகிக்கவும் புனேவைச் சேர்ந்த சீரம் நிறுவனத்துடன் அஸ்ட்ரா செனகா ஒப்பந்தம் மேற்கொண்டிருந்தது. இதைத்தொடர்ந்து மத்திய அரசின் ஒப்புதலுடன் ஆக்ஸ்போர்ட் கொரோனா தடுப்பூசியை கோவிஷீல்ட் என்ற பெயரில் உற்பத்தி செய்து, சேமித்து வைக்கும் பணிகளை சீரம் நிறுவனம் கடந்த சில மாதங்களாக மேற்கொண்டு வந்தது.
தடுப்பூசிக்கு ஒப்புதல்
ஆக்ஸ்போர்ட் தடுப்பூசிக்கு முதல் நாடாகப் பிரிட்டன் கடந்த சில நாட்களுக்கு முன் ஒப்புதல் அளித்திருந்தது. இந்நிலையில், இந்தியாவிலும் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசியுடன் இணைந்து, கோவிஷீல்ட் தடுப்பூசியின் அவரசகால பயன்பாட்டிற்கும் அனுமதி அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து விரைவில் தடுப்பூசி அளிக்கும் பணிகள் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சிறப்பு விலையில் தடுப்பூசி
இந்நிலையில், சீரம் நிறுவனத்தின் சிஇஓ ஆதார் பூனவல்லா, "முதல் 10 கோடி தடுப்பூசி டோஸ்களை, நாங்கள் மத்திய அரசுக்குச் சிறப்பு விலையாக 200 ரூபாய்க்கு வழங்குகிறோம். அதன் பின் விலையில் மாற்றம் இருக்கும். நிலைமைக்கு ஏற்றவாறு வெவ்வேறு விலைகள் தடுப்பூசி கிடைக்கும். ஆனால், நாங்கள் என்ன விலைக்கு மத்திய அரசுக்குத் தடுப்பூசியை விற்பனை செய்தாலும், அரசு மக்களுக்கு இலவசமாகவே தடுப்பூசியை வழங்கும்.
வெளிச்சந்தையில் 2000 ரூயாய்
அதேபோல, அரசு அனுமதி அளிக்கும்பட்சத்தில் நாங்கள் வெளிச் சந்தைகளில் தடுப்பூசியை விற்பனை செய்வோம். அங்கு ஒரு தடுப்பூசி டோஸின் விலை ரூ. 1000 ஆக இருக்கும்" என்றார். ஆக்ஸ்போர்ட் தடுப்பூசி 21 நாட்கள் இடைவெளியில் இரண்டு டோஸ்களாக செலுத்தப்பட வேண்டும். அதாவது வெளிச் சந்தையிலிருந்து ஒருவர் தடுப்பூசி பெற விரும்பினால், 2000 ரூபாய் செலவிட வேண்டும்.
அடுத்த வாரம் தடுப்பூசி செலுத்தும் பணி தொடக்கம்
கடந்த சில மாதங்களாகத் தடுப்பூசியைச் சேகரித்து வந்ததன் மூலம் தற்போது சீரம் நிறுவனத்திடம் ஐந்து கோடி தடுப்பூசி டோஸ்கள் பயன்படுத்தத் தயார் நிலையில் உள்ளன. மத்திய அரசின் அனுமதியும் கிடைத்துவிட்டதால், இன்னும் சில நாட்களில் தடுப்பூசி வழங்கும் பணிகள் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து ஆதார் பூனவல்லா கூறுகையில்,"அடுத்த 7 முதல் 10 நாட்களில் அனைத்து நடைமுறைகளும் நிறைவடையும் என்று எதிர்பார்க்கிறோம். அதன்பிறகு மிக விரைவாகத் தடுப்பூசி விநியோகம் தொடங்கும். அதிகபட்சமாக அடுத்து 1.5 மாத்தில் ஏழு முதல் எட்டு கோடி தடுப்பூசி டோஸ்களை விநியோகிக்க முடியும் என்று நம்புகிறேன்.
மத்திய அரசு அனுமதிக்கவில்லை
தடுப்பூசியை ஏற்றுமதி செய்யவும், வெளிச் சந்தைக்கு விற்பனை செய்யவும் மத்திய அரசு இப்போது எங்களுக்கு அனுமதி அளிக்கவில்லை. இது குறித்து நாங்கள் ஆலோசித்து வருகிறோம். இருப்பினும், அரசின் முடிவை நான் மதிக்கிறேன். ஏனென்றால் அதிகம் தேவைப்படும் மக்களுக்கே முதலில் தடுப்பூசி வழங்கப்பட வேண்டும். இந்தியாவில் முதலில் அதிக ஆபத்தானவர்களுக்கும் முதியவர்களுக்கும் சுகாதார ஊழியர்களுக்கும் தடுப்பூசி வழங்கப்படும். அதற்கு முன் எந்தவொரு தனி நபரும் நிறுவனமும் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப தடுப்பூசியை எடுத்துக்கொள்ள முடியாது" என்றார்.