புணேயில் நாளை முதல் ஆக்ஸ்போர்டு தடுப்பூசியின் 3ஆம் கட்ட பரிசோதனை
டெல்லி: புணேவில் நாளை முதல் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் கோவிஷீல்டு தடுப்பூசி 3ஆம் கட்ட பரிசோதனை தொடங்குகிறது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு 53 லட்சத்தை தாண்டியுள்ளது. உலகில் கொரோனா பாதிப்பு 3 கோடியை தாண்டிவிட்டது. இதனால் உலக நாடுகள் கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன.
அந்த வகையில் இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும் அஸ்ட்ராஜெனேகா நிறுவனமும் இணைந்து கொரோனா தடுப்பூசி உருவாக்கியது. அதை இந்தியாவில் தயாரிக்கும் உரிமம் புணேவில் உள்ள சீரம் இன்ஸ்டிடியூட்டிற்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்த தடுப்பூசிக்கு கோவிஷீல்டு என பெயரிடப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசியின் முதல் மற்றும் 2ஆம் கட்ட பரிசோதனையை அந்த நிறுவனம் முடித்துவிட்டது. இதையடுத்து புணவில் உள்ள சசூன் அரசு பொது மருத்துவமனையில் 3ஆம் கட்ட பரிசோதனைக்கான நடவடிக்கைகளை அந்த நிறுவனம் தொடங்கியுள்ளது.
ஒரே நாளில் இத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பா?.. தொடர்ந்து முதலிடத்தில் இந்தியா!
இதற்காக நேற்று முதல் தன்னார்வலர் பதிவு நடவடிக்கையை மருத்துவமனை நிர்வாகம் தொடங்கியது. இதில் 200 தன்னார்வலர்கள் வந்துள்ளார்கள். முன்னதாக இங்கிலாந்தில் இந்த தடுப்பூசி போட்டுக் கொண்ட ஒருவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது.
இதனால் பரிசோதனை நடவடிக்கையை அஸ்ட்ராஜெனேகா நிறுவனம் நிறுத்தி வைத்திருந்தது. இந்த நிலையில் அந்த பரிசோதனைகள் மீண்டும் 15-ஆம் தேதி முதல் தொடங்கியுள்ளது.