கொரோனா அதிகரிப்பு...ஆக்சிஜன் பற்றாக்குறை...எகிறும் விலை...மாநிலங்கள் திண்டாட்டம்!!
டெல்லி: நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், ஆக்சிஜன் பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளது. இதனால், ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்திற்கு ஆக்சிஜன் அனுப்புவதற்கு சில மாநிலங்கள் தடை விதித்துள்ளன. இதை தடுக்குமாறு மத்திய அரசுக்கு சில மாநிலங்கள் கடிதம் எழுதியுள்ளன.
மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா தொற்று எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரைக்கும் இந்த எண்ணிக்கை பத்து லட்சத்தை கடந்துள்ளது. இதனால், ஆக்சிஜன் சிலிண்டருக்கும் பற்றாகுறை ஏற்பட்டுள்ளது. இதை தவிர்க்கும் வகையில், இந்த மாநிலத்தில் இருந்து வேறு மாநிலத்துக்கு ஆக்சிஜன் சிலிண்டர் கொண்டு செல்வதற்கு மாநில அரசு தடை விதித்துள்ளது.
சீனா...கொரோனா தடுப்பு மருந்து...நவம்பரில் மனித பயன்பாட்டுக்கு வருகிறது!!
ஆக்சிஜன் இருப்பு
கர்நாடகா மற்றும் மத்தியப் பிரதேச மாநிலங்களிலும் ஆக்சிஜன் சிலிண்டர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் தங்களுக்கு என்று 50% முதல் 80% வரை ஆக்சிஜன் சிலிண்டர் இருப்பு வைத்துக் கொள்ள அந்த மாநில அரசு முடிவு செய்துள்ளது. இதனால், கடந்த செப்டம்பர் 7 ஆம் தேதியில் இருந்து மற்ற மாநிலங்களுக்கு ஆக்சிஜன் சிலிண்டர் அனுப்புவதற்கு தடை விதித்துள்ளது.
உயிரிழப்பு
மத்தியப் பிரதேச மாநிலத்தில் இருக்கும் தேவாஸ் மாவட்டத்தில் ஆக்சிஜன் சிலிண்டர் இல்லாமல் சமீபத்தில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். நாக்பூரில் ஆக்சிஜன் சிலிண்டர் வெளி மாநிலங்களுக்கு அனுப்புவதற்கு தடை விதிக்கப்பட்டதை அடுத்து தேவாஸ், ஜபல்பூர், சிந்த்வாரா, தமோ ஆகிய மாவட்டங்களில் ஆக்சிஜன் சிலிண்டர் பற்றாகுறை ஏற்பட்டுள்ளது.
உபியில் பற்றாக்குறை
பஞ்சாப் மாநிலமும் தடை விதித்துள்ளது. இந்த மாநிலத்தில் இருந்து முன்பு இமாசலப் பிரதேசம், உத்தரகண்ட், அரியானா ஆகிய மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டு வந்தது. டெல்லியில் ஆக்சிஜன் சிலிண்டருக்கு தேவை அதிகரித்து இருப்பதை அடுத்து ஆக்ராவுக்கு அளித்து வந்த சிலிண்டர் தடை செய்யப்பட்டுள்ளது. மத்தியப் பிரதேச மாநிலத்தில் போபால், இந்தூரில் தேவை அதிகரித்து இருப்பதால் உத்தரப் பிரதேசத்தில் பற்றாக்குறை அதிகரித்துள்ளது. இதனால், உத்தரப் பிரதேசத்தின் ஜான்சி, பண்டில்கன்ட் ஆகிய இடங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாடு
கேரளாவுக்கு அந்த மாநிலத்தில் இருக்கும் ஆக்சிஜன் நிறுவனங்களே 60% சப்ளை செய்து வருகின்றன. மேலும், தமிழகத்தில் இருக்கும் நிறுவனங்களும் சப்ளை செய்கின்றன. இதனால் இந்த மாநிலத்தில் பற்றாக்குறை ஏற்படவில்லை.
பற்றாக்குறை
கர்நாடகா மாநிலத்தில் கடந்த ஆகஸ்ட் 13ஆம் தேதி 19 மாவட்ட மருத்துவமனைகளில் ஆக்சிஜன் சிலிண்டர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து 50க்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகள் பெங்களூருவுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். இன்னும் போதிய ஆக்சிஜன் இல்லாமல் இந்த மாநிலம் திணறுகிறது.
தேவை அதிகரிப்பு
இந்த மாநிலத்தில் வர்த்தகம் மற்றும் தொழில் துறைக்கான தலைமை செயலாளர் கவுரவ் குப்தா டைம்ஸ் ஆப் இந்தியாவுக்கு அளித்து இருக்கும் பேட்டியில், ''தினமும் 500 மெட்ரிக் டன் ஆக்சிஜன் தேவைப்படுகிறது. கொரோனாவுக்கு முன்பு தினமும் 100-150 மெட்ரிக் டன் மட்டுமே தேவைப்பட்டது. தேவை அதிகரித்து இருப்பதால், பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது'' என்றார்.
ஆந்திராவில் உச்சம்
தேவை அதிகரித்து இருப்பதால் விலையும் அதிகரித்துள்ளது. தேசிய பார்மாசூட்டிகல் விலை ஆணையம் ஒரு கியூபிக் மீட்டர் ஆக்சிஜனுக்கான விலையை ரூ. 17 என்று கடந்தாண்டு நிர்ணயம் செய்து இருந்தது. இது தற்போது பற்றாக்குறை காரணமாக ஆந்திராவில் ரூ. 50 வரை அதிகரித்து இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.
அதிகரிக்க வாய்ப்பு
அரசு மருத்துவமனையில் இருந்து அனுப்பப்பட்டும் கொரோனா நோயாளிகளுக்கு ஒரு நாளைக்கான சிலிண்டருக்கு ரூ. 7000 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால், இது போதாது இன்னும் அதிகரிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது என்று பெங்களூர் மருந்துவமனையைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
கோவா
உத்தரப்பிரதேசத்தில் சிறிய சிலிண்டரின் விலை ரூ. 130 முதல் ரூ. 315-350 வரை விற்கப்படுகிறது. இது தற்போது ரூ. 5,000ல் இருந்து ரூ. 10,000 வரை விற்கப்படுகிறது. இதுவே கோவாவில் ஒரு கியூபிக் மீட்டர் ரூ. 3.5ல் இருந்து ரூ. 5 ஆக அதிகரித்துள்ளது. கர்நாடகாவில் ஒரு கியூபிக் மீட்டர் ரூ. 13-18ல் இருந்து ரூ. 40 ஆக அதிகரித்துள்ளது.