கண்கலங்கிய வைரமுத்து.. திருக்குறள் சொன்ன ப.சிதம்பரம்.. டெல்லி கோர்ட்டில் ஒரு பாசப்போராட்டம்
Recommended Video
டெல்லி: சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில், இன்று, நேருக்கு நேர் சந்தித்துக் கொண்ட முன்னாள் மத்திய அமைச்சர், ப.சிதம்பரமும், கவிஞர் வைரமுத்துவும் திருக்குறளை மேற்கோள் காட்டி உருக்கமாக பேசிக்கொண்டனர்.
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கடந்த ஆகஸ்ட் மாதம் சிபிஐயால், கைது செய்யப்பட்டார் ப.சிதம்பரம். அவர் தற்போது திகார் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளார். கடந்த திங்கள்கிழமை சிதம்பரம் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.
இந்த நிலையில் டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்த அழைத்து வரப்பட்டு இருந்தார் சிதம்பரம். அப்போது அவரை சந்திப்பதற்காக சென்னையிலிருந்து கவிஞர் வைரமுத்து வருகை தந்திருந்தார்.
ஐ.என்.எக்ஸ்.வழக்கு: ப. சிதம்பரத்துக்கு அக்.17 வரை சிறை! ஜாமீன் மனு மீது நாளை சுப்ரீம்கோர்ட் விசாரணை?
திகார் சிறை
இன்றைய விசாரணையின்போது, வரும் 17ம் தேதி வரை நீதிமன்றக் காவலை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, திகார் சிறைச்சாலைக்கு, மீண்டும் சிதம்பரம் அழைத்து செல்லப்பட, இருந்தார். அதற்கு முன்பாக, நீதிமன்ற அறையில் வைரமுத்து, சிதம்பரம் மனைவி நளினி மற்றும் குடும்பத்தினர் அவரை, சந்தித்து பேசினர்.
இலக்கிய நயம்
சிதம்பரமும், வைரமுத்துவும் உருக்கமாக ஒருவரை ஒருவர் கண்களால் சந்தித்து கொண்டதை கவனிக்க முடிந்தது. நீண்டகால நண்பர்களான இவர்கள், சந்தித்துக் கொள்ளும் போதெல்லாம், இலக்கியம் தொடர்பாக உரையாடி கொள்வதை வழக்கமாகக் கொண்டவர்கள். சிறைச்சாலையிலிருந்து, நீதிமன்றத்திற்கு மாற்ற சிதம்பரம் அலைந்து கொண்டிருக்க கூடிய சூழ்நிலையிலும், தங்கள் சந்திப்பில் இலக்கிய நயத்தை கொண்டு வந்தனர் இருவரும்.
|
திருக்குறள் பரிமாற்றம்
வைரமுத்துவை பார்த்து சிதம்பரம் "இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்துவிடல்" என்ற திருக்குறளை, புன்முறுவலோடு சொல்ல, இதைக்கேட்டதும் பதிலுக்கு வைரமுத்துவும் திருக்குறளில் இருந்து ஒரு உதாரணத்தை எடுத்துவிட்டார். "அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை இகழ்வார்ப் பொறுத்தல் தலை" என்ற குறளை வைரமுத்து மேற்கோள் காட்ட, நீதிமன்ற அறை, ஏதோ இலக்கிய விழா நடைபெறும் இடம் போல போல மாறிவிட்டது.
உங்கள் புகழுக்கு எந்த களங்கமும் வராது இன்னமும் மேன்மை அடைவீர்கள் என்றும் வைரமுத்து அப்போது, ஆறுதல் தெரிவித்தார். எஸ்ரா சற்குணம் இந்த சந்திப்பின்போது உடனிருந்தார்.
கண் கலங்கிய வைரமுத்து
பின்னர், நிருபர்களிடம் பேசிய வைரமுத்து, சிதம்பரத்தின் உடல் எடை குறைந்து இருந்தாலும், மன உறுதி குறையவில்லை. சிதம்பரத்தை பார்த்ததும் கண் கலங்கினேன். ஆனால் அவர் உறுதியாக இருந்தார். அவரது உடல்நிலையை கருத்தில் கொண்டு, நீதிமன்றம் ஜாமீன் வழங்கும் என்று நம்புகிறேன். இவ்வாறு வைரமுத்து தெரிவித்தார்.