என் மீது எந்த தவறும் கிடையாது.. திடீர் என்று செய்தியாளர்களை சந்தித்த ப. சிதம்பரம்.. பரபர பேட்டி!
என் மீது எந்த புகாரும் இல்லை, ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் என் மீது எப்ஐஆர் கூட பதிவு செய்யவில்லை என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் பேட்டியளித்துள்ளார்.
டெல்லி: என் மீது எந்த தவறும் இல்லை, ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் என் மீது எப்ஐஆர் கூட பதிவு செய்யவில்லை என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் பேட்டியளித்துள்ளார்.
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் இன்று கைது செய்யப்பட வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள். ப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனு மீது உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரிக்கப்படவில்லை. இந்த மனு மீது நாளையும் விசாரணை நடக்காது.
ஆக.23-ல் இந்த மனு மீது விசாரணை நடக்கும். ப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனுவை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் பெஞ்ச் விசாரிக்கிறது. இவரை சிபிஐ அதிகாரிகள் தீவிரமாக தேடி வந்தனர்.
ஐஎன்எக்ஸ் வழக்கு
ஐஎன்எக்ஸ் வழக்கில் சிபிஐ தேடி வந்த நிலையில் ப. சிதம்பரம் இன்று டெல்லி காங்கிரஸ் தலைமையகத்திற்கு வருகை புரிந்தார். டெல்லி காங்கிரஸ் தலைமையகத்தில் ப. சிதம்பரம் செய்தியாளர்களை சந்தித்தார். வழக்கறிஞர்கள் கபில் சிபில், சல்மான் குர்ஷித் உடன் இருந்தனர்.
என்ன பேட்டி
ப. சிதம்பரம் தனது பேட்டியில், நாம் சுதந்திரத்தை பெறவும் போராடுகிறோம், காக்கவும் போராடுகிறோம். ஜனநாயக மீது எனக்கு இன்னமும் நம்பிக்கை இருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் நிறைய நடந்து விட்டது. பலருக்கும் கடந்த ஒருநாள் நிகழ்வுகள் குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கலாம்.
என்ன பொய்
ஐஎன்எக்ஸ் வழக்கில் என்னை நேரடியாக குற்றஞ்சாட்டவில்லை. ஐஎன்எக்ஸ் வழக்கில் குற்றப்பத்திரிக்கை இன்னும் தாக்கல் செய்யப்படவில்லை.அதேபோல் எப்ஐஆரில் என்னுடைய பெயர் இல்லை. நான் தவறு செய்ததாக எங்கும் குற்றச்சாட்டு இல்லை. இந்த வழக்கில் நிறைய பொய்யான தகவல்களை பரப்புகிறார்கள். பொய் சொல்வதில் வல்லமை படைத்தவர்கள் இதில் பொய்யை பரப்புகிறார்கள்.
என்ன உண்மை
உண்மையை ஆனால் யாரும் மறைக்க முடியாது.எனக்கு சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. நான் அதற்கு எதிராக மனுதாக்கல் செய்தேன். எனக்கு 2018 மே மாதமே விசாரணையில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று எனக்கு டெல்லி ஹைகோர்ட் முன் ஜாமீன் வழங்கப்படவில்லை. இதனால் நான் சுப்ரீம் கோர்ட் சென்றேன்.
என்ன வழக்கு
ஆனால் இந்த வழக்கை உச்ச நீதிமன்றம் அவசரமாக விசாரிக்க மறுத்துவிட்டார்கள். இதனால் அவசர அவசரமாக நாங்கள் இரவு முழுக்க முன் ஜாமீன் மனுக்களை தயார் செய்தோம். ஆனால் சுப்ரீம் கோர்ட் இந்த வழக்கை இன்று விசாரிக்க முடியாது. வெள்ளிக்கிழமைதான் விசாரிப்போம் என்று உச்ச நீதிமன்றம் கூறிவிட்டது. நான் சட்டத்தில் இருந்து மறைந்து ஒளியவில்லை.
சட்டம்
நான் சட்டத்தில் இருந்து தப்பி செல்லவில்லை. ஆனால் என் மீது தவறாக புகார் கூறினார்கள். என் மீதும், என் குடும்பம் மீது எப்ஐஆர் பதிவு செய்யப்படவில்லை. விசாரணை ஆணையம் சட்டத்தை மதித்து நடக்க வேண்டும். நான் சட்டத்தை மதிக்கிறேன், எங்கும் செல்லவில்லை. நான் தலை நிமிர்ந்து நடப்பேன். வெள்ளிக்கிழமை வழக்கு விசாரணை வரை ஆணையம் பொறுமை காக்க வேண்டும்.