வெள்ளை வேட்டி, வெள்ளை சட்டை.. எந்த பதற்றமும் இல்லாத புன்முறுவல்.. 'பளிச்' ப.சிதம்பரம்!
Recommended Video
டெல்லி: நாடே உற்று பார்த்துக் கொண்டிருக்கும் ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டு உள்ளோம் என்ற பதட்டம், பீதி எதுவுமே சிதம்பரத்தின் முகத்தில் எட்டிக்கூட பார்க்கவில்லை. ஆம்.. சிபிஐ வழக்கில் நேற்று இரவு கைது செய்யப்பட்ட சிதம்பரம் இன்று டெல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது அவர் எப்படி வந்தார் என்பதை தான் சொல்கிறோம்.
சிதம்பரம் தனது செல்போனை சுவிட்ச் ஆப் செய்து விட்டார்.. காரிலிருந்து பாதியில் இறங்கி தப்பி ஓடி விட்டார்.. தலைமறைவாகி விட்டார் என்றெல்லாம் நேற்று பெரும் செய்திகள் பரப்பப்பட்டன. ஆனால் அந்த செய்திகளுக்கும், சிதம்பரம் இன்று நடந்து கொண்ட விதத்திற்கும், எந்த ஒரு தொடர்பும் கிடையாது என்பது புரிகிறது.
சிபிஐ தலைமையகத்தில் இருந்து அவர் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட போதும் சரி, நீதிமன்ற வளாகத்திற்குள் நடந்து சென்ற போதும் சரி, அவர் தனது புன்முறுவலையும், வழக்கமான சிரிப்பையும் மறக்கவில்லை.
நீதிமன்றத்தை சுற்றி குவிந்திருந்த தொண்டர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்களை நோக்கி கையெடுத்துக் கும்பிடுவதையும் அவர் தவிர்க்கவில்லை.
வழக்கமான வெள்ளை நிற வேட்டி சட்டை அணிந்து எப்போதும் போன்ற கம்பீரத்துடன் தான் அவர் நீதிமன்றம் வந்தார் என்பதை பார்க்க முடிந்தது.