ப.சிதம்பரம் கைது.. அடுத்து என்ன நடக்கும்?
Recommended Video
டெல்லி: ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சிதம்பரத்தை கைது செய்ய தேடி வந்த சிபிஐ இன்று இரவு டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து கைது நடவடிக்கையை எடுத்துள்ளது.
சிதம்பரத்தின் வீட்டு சுவர் ஏறி குதித்து உள்ளே நுழைந்த சிபிஐ அதிகாரிகள், அவரை கைது செய்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. முன்னாள் மத்திய நிதி அமைச்சர், முன்னாள் பாதுகாப்பு அமைச்சரான சிதம்பரத்தை, இதுபோல நடத்தியது சரி இல்லை என்று கண்டனக் குரல்களும் எழுந்துள்ளன.
சுவர் ஏறி குதித்து வீடு புகுந்த சிபிஐ.. ப. சிதம்பரம் அதிரடி கைது.. டெல்லியில் பெரும் பரபரப்பு!
இந்த நிலையில், இந்த வழக்கில் அடுத்து என்ன நடைபெறும் என்பது குறித்து பார்க்கலாம்:
*கைது செய்யப்பட்ட சிதம்பரம் அவரது இல்லத்திலிருந்து சிபியை தலைமையகம் அழைத்துச் செல்லப்படுவார். அங்கு இரவு அவரிடம் விசாரணை நடத்தப்படும். இந்த விசாரணை எவ்வளவு நேரம் நடைபெறும் என்பதை சிபிஐ தான் முடிவு செய்யும்.
* சிதம்பரம் தற்போது ராஜ்யசபா எம்பியாக உள்ளார். எனவே அவர் கைது செய்யப்பட்டு உள்ளது தொடர்பாக ராஜ்யசபா தலைவர் வெங்கையா நாயுடுவிற்கு, சிபிஐ சார்பில் உடனடியாக தகவல் தெரிவிக்கப்படும்.
* சிதம்பரத்தை கைது செய்த 24 மணி நேரத்துக்குள், நீதிமன்றத்தில் அவர் ஆஜர் படுத்தப்படுவார். எனவே நாளை மாலைக்குள் அவர் டெல்லியில் உள்ள மாஜிஸ்ட்ரேட் முன்னிலையில் ஆஜர் படுத்தப் படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
*உச்ச நீதிமன்றத்தில் சிதம்பரம் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனு வரும் வெள்ளிக்கிழமைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது. தற்போது சிபிஐ அவரை கைது செய்து விட்டதால் அந்த மனு காலாவதியாகிவிட்டது. புதிதாக ஜாமின் மனு சிதம்பரம் தரப்பில் தாக்கல் செய்யப்பட வேண்டும்.