இன்னும் 11 நாள் காத்திருக்க வேண்டும் ப சிதம்பரம்.. ஜாமீன் மனு விசாரணை அக்.15ம் தேதிக்கு ஒத்திவைப்பு
Recommended Video
டெல்லி: ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கைதாகி சிறையில் உள்ள ப சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீதான விசாரணையை அக்டோபர் 15ம் தேதிக்கு ஒத்திவைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கடந்த ஆகஸ்ட் மாதம் 21-ஆம் தேதி சிபிஐ அதிகாரிகளால் டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் கைது செய்யப்பட்டார். இதையடுத்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ப சிதம்பரத்தை சிபிஐ காவலில் 14 நாட்கள் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
இதையடுத்து காவல் முடிந்த உடன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ப சிதம்பரத்தை செப்டம்பர் 19-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து ப சிதம்பரம் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார். அதைத்தொடர்ந்து அக்டோபர் 3ம் தேதி வரை மீண்டும் நீட்டிக்கப்பட்ட ப சிதம்பரத்தின் காவல் அக்டோபர் 17ம் தேதி வரை நீட்டித்து நேற்று நீதிமன்றம் உத்தரவிட்டது.
மைத்துனரின் மாமனாருக்கு வெயிட் பதவி... டிடிவி தினகரன் அறிவிப்பு
இதற்கிடையே உச்சநீதிமன்றத்துக்கு அடுத்த வாரம் முதல் நீண்டவிடுப்பு வருவதால் நாளையே ஜாமீன் மனுவை விசாரிக்க ப.சிதம்பரம் தரப்பு நேற்று வலியுறுத்தியது. இருப்பினும் ப.சிதம்பரம் ஜாமீன் மனு மீது எப்போது விசாரணை என்பதை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்தான் முடிவு செய்வார் என நீதிபதி என்.வி. ரமணா தெரிவித்து இருந்தார்.
இதையடுத்து ப சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீது விசாரணை இன்று உச்ச நீதிமன்றத்தில் தொடங்கிய நிலையில், அக்டோபர் 15 ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.14ம் தேதிக்குள் சிபிஐ பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதன் காரணமாக இன்னும் 11 நாட்களுக்கு மேல் அவர் சிறையில் தான் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.