ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு: ப.சிதம்பரத்திடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை
டெல்லி: ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை அடுத்து, முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் டெல்லி அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்து வருகிறார்.
2007ம் ஆண்டு, மத்திய நிதி அமைச்சராக ப.சிதம்பரம் பதவி வகித்தபோது, பீட்டர் முகர்ஜி அவரது மனைவி இந்திராணி ஆகியோருக்கு சொந்தமான ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்திற்கு விதிமுறைகளுக்கு மாறாக ரூ.305 கோடி அன்னிய முதலீடுக்கு வெளிநாட்டு முதலீட்டு மேம்பாட்டு வாரியம் மூலம் அனுமதி வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுதொடர்பாக கடந்த வருடம் மே 15ம் தேதி சிபிஐ எப்ஐஆர் பதிவு செய்தது. இந்த வழக்கு தொடர்பாக சிதம்பரம் மகன், கார்த்தி சிதம்பரம் கைது செய்யப்பட்டிருந்தார்.
இந்த நிலையில், சிதம்பரத்திடம் விசாரணை நடத்த அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. இதையேற்று டெல்லியிலுள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் சிதம்பரம் ஆஜராகி, அதிகாரிகள் கேள்விகளுக்கு பதிலளித்து வருகிறார்.
Delhi: P Chidambaram has reached Enforcement Directorate (ED) headquarter. He was summoned by ED in INX Media Case. pic.twitter.com/2kapHlePic
— ANI (@ANI) December 19, 2018
இவ்வாண்டு இதற்கு முன்பாக ஒருமுறை சிதம்பரத்திடம் அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தியிருந்தனர். சிதம்பரம் தங்கள் விசாரணைக்கு ஒத்துழைப்பு தரவில்லை என அவர்கள் குற்றம்சாட்டினர். இந்த நிலையில் 2வது முறையாக இன்று சிதம்பரத்திடம் விசாரணை நடைபெறுகிறது.
சிதம்பரத்தை கைது செய்து விசாரிக்க நீதிமன்றம் தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.