26ம் தேதிவரை அமலாக்கத்துறை கைது செய்ய முடியாது.. ப.சிதம்பரத்திற்கு இடைக்கால முன்ஜாமீன்
Recommended Video
டெல்லி: ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு தொடர்பாக, அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்துக்கு வரும் 26ம் தேதி வரை இடைக்கால முன்ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆனால், ஏற்கனவே சிபிஐ தாக்கல் செய்த வழக்கில், சிதம்பரம் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கிறார். அவரது சிபிஐ கஸ்டடி காலம் 26ம் தேதிதான் முடிவடைகிறது.
ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கை அமலாக்கத்துறை மற்றும், சிபிஐ விசாரித்து வருகின்றன. இதில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமீன் மறுக்கப்பட்ட நிலையில் சிதம்பரத்தை கடந்த புதன்கிழமை இரவோடு இரவாக சிபிஐ கைது செய்தது நேற்று அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது வரும் 26ம் தேதி திங்கள்கிழமை வரை ஐந்து நாட்களுக்கு சிபிஐ கஸ்டடியில் வைத்து விசாரிக்க சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
இந்த நிலையில், அமலாக்கத்துறை தன்னை கைது செய்யாமல் இருக்க, சிதம்பரம் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் முன்ஜாமீன் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அவர் தரப்பில், கபில் சிபல் மற்றும் அபிஷேக் சிங் ஆஜராகி வாதிட்டனர். நீதிபதிகள் பானுமதி போபண்ணா அமர்வு விசாரித்தது.
அமலாக்கத்துறை சார்பில் துஷார் மேத்தா ஆஜராகியிருந்தார். சிதம்பரத்துக்கு எதிராக பல்வேறு ஆவணங்கள் எங்களிடம் உள்ளது. பீட்டர் முகர்ஜி மற்றும் இந்திராணி முகர்ஜி ஆகியோரிடம் விசாரணை நடத்தியபோது, "சிதம்பரம் அமைச்சராக இருந்தபோது தங்களை சந்தித்ததாக இந்திராணி முகர்ஜி வாக்குமூலம் அளித்துள்ளார். கார்த்தி சிதம்பரம் நிறுவனத்திற்கு லஞ்சம் அளிக்க சிதம்பரம் வற்புறுத்தியதாகவும் இந்திராணி முகர்ஜி தனது வாக்கு மூலத்தில் தெரிவித்திருந்தார். ஆதாரங்கள் அடிப்படையில் தான் சிதம்பரத்துக்கு எதிராக விசாரணை நடக்கிறதே, தவிர அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக கிடையாது" என்று வாதிட்டார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த உச்ச நீதிமன்றம், வரும் 26-ம் தேதி வரை சிதம்பரத்தை அமலாக்கப்பிரிவு கைதுசெய்ய இடைக்கால முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.
ஆனால் 26ம் தேதிவரை வரை சிதம்பரம் சிபிஐ கஸ்டடியில் இருக்கிறார். எனவே இந்த இடைக்கால முன் ஜாமீனால் அவருக்கு பெரிய பலன் கிடையாது. ஒரு வேளை திங்கள்கிழமைக்கு பிறகு முன் ஜாமீன் கிடைத்தால்தான், சிதம்பரத்துக்கு அது பலனளிக்கக் கூடும்.