மகன் அடைக்கப்பட்ட அதே அறையில் தந்தை.. இனி சிறையில் சிதம்பரத்தின் ரொட்டீன் வொர்க் இதுதான்!
Recommended Video
டெல்லி: டெல்லி திகார் சிறையில் மகன் கார்த்தி சிதம்பரம் அடைக்கப்பட்ட அதே அறையில் தந்தை ப.சிதம்பரமும் அடைக்கப்பட்டுள்ளார்.
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் அமைச்சரும், இன்னாள் ராஜ்யசபா உறுப்பினருமான ப. சிதம்பரம் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் அவர் ஜாமீன் கோரி டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
அந்த மனு மீது நேற்று விசாரணை நடந்தது. அப்போது திகார் சிறைக்கு அனுப்ப வேண்டாம் என கேட்டுக் கொண்டார் ப.சிதம்பரம். மேலும் தான் அமலாக்கத் துறை காவலுக்கு செல்ல தயாராக உள்ளேன் என்றார்.
90 மணிநேரங்கள்.. துருவி துருவி கேட்ட சிபிஐ அதிகாரிகள்.. 450 கேள்விகளுக்கு பதிலளித்தார் ப.சிதம்பரம்
பேச அனுமதி
எனினும் அவரை திகார் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். செப்டம்பர் 19-ஆம் தேதி வரை அவர் அங்கு அடைக்கப்படுகிறார். இந்த தீர்ப்பு வெளியானதும் தனது குடும்பத்தினரிடம் சிறிது நேரம் பேசுவதற்கு ப.சிதம்பரம் அனுமதிக்கப்பட்டார்.
நீல நிற பேருந்து
இதைத் தொடர்ந்து அவரை நீதிமன்றத்தில் இருந்து 21 கி.மீ. தூரத்தில் உள்ள திகார் சிறைக்கு நீல நிற பேருந்தில் அவர் அழைத்து செல்லப்பட்டார். அரை மணி நேரத்தில் அந்த சிறையை அவர் அடைந்தார். பின்னர் வழக்கமாக மேற்கொள்ளப்படும் பரிசோதனை அவருக்கு மேற்கொள்ளப்பட்டன.
கார்த்தி சிதம்பரம்
இதையடுத்து அவர் பொருளாதார மோசடி செய்த குற்றவாளிகளுக்கான சிறையின் ஒரு பகுதிக்கு அழைத்து செல்லப்பட்டார். தனி அறை கேட்டிருந்த நிலையில் அவர் அறை எண் 7-இல் அடைக்கப்பட்டார். அங்கு வெஸ்டர்ன் கழிவறை வசதிகள் அவருக்கு வழங்கப்படுகிறது. இந்த 7-ஆம் எண் கொண்ட அறையில்தான் கடந்த ஆண்டு கார்த்தி சிதம்பரமும் அடைக்கப்பட்டிருந்தார்.
குறிப்பிட்ட நேரம்
இசட் பாதுகாப்பு உள்ளிட்ட நீதிமன்ற உத்தரவுகளை தவிர்த்து அவருக்கு வேறு எந்த சலுகையும் வழங்கப்படமாட்டாது என திகார் சிறை அதிகாரி சந்தீப் கோயல் தெரிவித்தார். மேலும் மற்ற கைதிகளை போல் சிறை நூலகத்தை பயன்படுத்துவது, பொது தொலைகாட்சி பார்ப்பது உள்ளிட்டவை குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டுமே அனுமதிக்கப்படும்.
உணவுகள்
இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை சிறையில் அடைக்கப்படுவார். அங்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை வேண்டுமானால் சிதம்பரம் பயன்படுத்திக் கொள்ளலாம். இல்லாவிடில் கேன்டீனில் விற்கும் பாட்டில் குடிநீரை பெற்று கொள்ளலாம். இரவு 7 முதல் 8 மணிக்குள் சப்பாத்தி, பருப்பு, கூட்டு ஆகிய உணவுகள் வழங்கப்படும். மற்றபடி அவர் வழக்கமாக உட்கொள்ளும் மருந்துகள் வழங்கப்படும். இனி இதுதான் சிதம்பரத்தின் வழக்கமாக இருக்கும்.