8 கிலோ குறைந்துவிட்டார்.. கேன்சரில் போய் முடிந்துவிடும்.. ப.சிக்காக கடுமையாக வாதிட்ட கபில் சிபல்!
முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரத்தின் எடை 8 கிலோ குறைந்துவிட்டது, அவருக்கு வயிற்றில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று அவர் வழக்கறிஞர் கபில் சிபல் வாதிட்டுள்ளார்.
டெல்லி: முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரத்தின் எடை 8 கிலோ குறைந்துவிட்டது, அவருக்கு வயிற்றில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று அவர் வழக்கறிஞர் கபில் சிபல் வாதிட்டுள்ளார்.
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ கஸ்டடி முடிந்த நிலையில் தற்போது திகார் சிறையில் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் அடைக்கப்பட்டு இருக்கிறார். இவரின் நீதிமன்ற காவல் நவம்பர் 14ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.
தற்போது ப. சிதம்பரம் உடல் நிலையில் அடிக்கடி பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இதையடுத்து இடைக்கால ஜாமீன் கேட்டு ப. சிதம்பரம் மனுதாக்கல் செய்தார். டெல்லி ஹைகோர்ட் அவரின் 3 நாள் இடைக்கால ஜாமீன் மனுவை நிராகரித்துவிட்டது.
3 நாள் சிகிச்சைக்கு நோ அனுமதி.. ப. சிதம்பரத்திற்கு இடைக்கால ஜாமீனும் கிடையாது.. டெல்லி ஹைகோர்ட்!
என்ன வாதம்
இந்த வழக்கில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் ப. சிதம்பரம் சார்பாக மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் இன்று வாதம் செய்தார். அவர் தனது வாதத்தில், கபில் சிபல் கடுமையான வயிற்று வலியால் அவதிப்பட்டு வருகிறார். இது குரோன்ஸ் நோய் என்று மருத்துவர்கள் கூறி உள்ளனர். இதனால் வயிற்றில் அலர்ஜி ஏற்பட்டு புண்கள் ஏற்பட்டுள்ளது. அவரால் சாப்பிட முடியவில்லை .
கேன்சர் வாய்ப்பு
இதை இப்படியே விட்டால் அது கேன்சராக கூட மாற வாய்ப்புள்ளது. இதனால் ப. சிதம்பரத்திற்கு அவரின் தனி மருத்துவர் நாகேஸ்வர் ரெட்டி சிகிச்சை அளிக்க வேண்டும். ப. சிதம்பரம் தனக்கு நாகேஸ்வர் ரெட்டியின் சிகிச்சை மட்டும்தான் பலன் அளிக்கிறது என்கிறார்.
கருத்தில் கொள்ள வேண்டும்
இதை நீதிமன்றம் கருத்தில் கொள்ள வேண்டும். அவரின் எடை இப்போதே 73 கிலோவில் இருந்து 66 கிலோவாக குறைந்துவிட்டது. உடனே அவருக்கு தனிப்பட்ட சிறப்பு சிகிச்சை அளிக்க வேண்டும் . நீதிமன்றம் இதை மறுக்க கூடாது என்று கபில் சிபல் கூறினார்.
எதிர் வாதம்
இதற்கு எதிர் வாதம் வைத்த அரசு தரப்பு வழக்கறிஞர் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, ப. சிதம்பரத்திற்கு எய்ம்ஸ் மருத்துவமனையில்தான் சிகிச்சை அளிக்கிறோம். விஐபி கைதிகளுக்கு அங்குதான் சிகிச்சை அளிப்போம். அவர்களுடன் சேர்ந்து வேண்டுமானால் டாக்டர் நாகேஸ்வர் ரெட்டியும் சிகிச்சை அளிக்கட்டும், என்று கூறினார்.
சுரேஷ் குமார்
இதையடுத்து நீதிபதி சுரேஷ்குமார் கெய்த், ப. சிதம்பரத்திற்கு எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை அளிப்பது நல்லது தானே? அதை ஏன் மாற்ற சொல்கிறீர்கள். பல ஜெயில் கைதிகளுக்கு சிகிச்சை கிடைக்காமல் மருத்துவமனையில் கஷ்டப்படுகிறார்கள், என்று கூறினார்.
தனி வார்டு
இதையடுத்து கபில் சிபல், எய்ம்ஸ் மருத்துவமனையில் ப. சிதம்பரத்திற்கு தனி வார்டு அளிக்க வேண்டும். சிறப்பு சிகிச்சை அளிக்க வேண்டும். அவருக்கு தனிப்பட்ட சிகிச்சை அளித்தால்தான் குணப்படுத்த முடியும், என்று குறிப்பிட்டார்.
இல்லை
இதற்கு நீதிபதி சுரேஷ்குமார் கெய்த், சிதம்பரத்திற்கு பெயில் தர முடியாது. எய்ம்ஸ் மருத்துவர்களும், மருத்துவர் நாகேஸ்வர் ராவும் அவரின் சிகிச்சை முறை தொடர்பாக முடிவு எடுக்கலாம். தனிப்பட்ட சிகிச்சை தேவையா என்பதை விளக்க வேண்டும். அவர்கள் இது தொடர்பாக நாளை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்., என்றார்.
கோபம்
ஆனால் பெயில் கிடைக்காத விரக்தியில் கோபம் அடைந்த கபில் சிபல், இதுபோன்ற எதிர்மறையான உத்தரவை நாங்கள் ஏற்க முடியாது. நான் இந்த மனுவையே வாபஸ் வாங்கி கொள்கிறேன். இந்த அரசு ஒருவரை சிகிச்சைக்கு கூட அனுமதிக்காமல் வாதம் செய்வது வருத்தமளிக்கிறது, என்று கோபமாக கூறினார். ஆனால் கடைசியில் அவர் மனுவை வாபஸ் வாங்கவில்லை என்று கூறிவிட்டார்.