100 பேரை தாண்டியாச்சு.. இப்போதான் ஜாக்கிரதையா இருக்கனும்.. ப.சிதம்பரம் கூறும் முன்னெச்சரிக்கை டிப்ஸ்
டெல்லி: கொரோனா வைரஸ் பாதிப்பு இனிதான் வேகமாக பரவும் வாய்ப்பு இருக்கிறது என்பதால், அதைக் கட்டுப்படுத்த சில நடவடிக்கைகள் அவசியம் என பட்டியலிட்டுள்ளார் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம்.
'தி இந்தியன் எக்ஸ்பிரஸ் 'ஆங்கில நாளிதழுக்கு அவர் அளித்துள்ள சிறப்பு பேட்டியில், சில விஷயங்களை அவர் வலியுறுத்தியுள்ளார். அதைப் பாருங்கள்.
அரசு இதுவரை எடுத்துள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் திருப்திகரமாகத்தான் தெரிகிறது. ஆனால் உலக சுகாதார ஆய்வு மையம், ஐசிஎம்ஆர், டாக்டர் தேவி செட்டி போன்றோர் கூறக்கூடிய ஆய்வுமுடிவுகளை வைத்து பார்த்தால், இனிமேல்தான் இந்திய அரசு இன்னும் கடினமான மற்றும் வலிமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்துகிறது.
குணம் அடைந்த காஞ்சிபுரம் என்ஜினியருக்கு மீண்டும் கொரோனா? மருத்துவமனையில் அனுமதி?
வேகமாகும் வாய்ப்பு
நாம் இப்போது ஒரு முக்கியமான காலகட்டத்தில் இருக்கிறோம். வைரஸ் பாதிப்பு 100 பேரையும் விட அதிகமாக சென்று சேரும்போது அது சமூகத்தின் பிற மக்களையும் எளிதாக தாக்கி விடுகிறது. சீனாவை விட்டு விடுங்கள்.. இத்தாலி மற்றும் ஸ்பெயின் நாடுகளிலும் இப்படித்தான் நடந்தது. பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 100ஐத் தாண்டிய பிறகுதான் அங்கு பாதிப்பு மிக வேகமாக பரவியது. அதுபோல இந்தியாவில் நடைபெறாது என்று நான் நம்புகிறேன். அது நடைபெறாத வண்ணம் நாம் பார்த்துக் கொள்ள வேண்டும்.
நகரங்களில் மூடல்
எனவே இதுதான் நமக்கான தருணம். நமது நாட்டில் உள்ள நகரங்களில் செயல்படக்கூடிய அனைத்து வணிக நிறுவனங்கள் மற்றும் பிற சேவைகளை கணிசமாக அல்லது முழுமையாகவோ தடைசெய்ய வேண்டிய நேரமிது என்று நினைக்கிறேன். இது கஷ்டமான விஷயம்தான். ஆனால் இரண்டு மூன்று வாரங்களுக்கு இதை தாங்கித்தான் ஆகவேண்டும் என்பதை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். பத்து நாட்களுக்குப் பிறகு நாம் கவலைப்படுவதை விட, இப்போதே இதுபோன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பது அவசியம்.
முதல்வர்களுடன் ஆலோசனை
பிரதமர், அனைத்து மாநில முதல்வர்களை, நேரிலோ அல்லது வீடியோ கான்பரன்ஸ் மூலமாகவோ அழைத்து ஆலோசனை நடத்த வேண்டும். ஒவ்வொரு மாநிலத்திலும் என்ன மாதிரி நிலைமை இருக்கிறது என்பதை கேட்டு அறிய வேண்டும். கேரளா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் பாதிப்பு அதிகம் இருக்கிறது. அவை வேறு மாதிரி தடுப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய தேவை இருக்கிறது. எனவே நாடு முழுக்க ஒரே மாதிரியான தடுப்பு நடவடிக்கைகள் கொண்டு வருவதற்கு பதிலாக, மாநில முதல்வர்களின் கருத்துக்களை கேட்டு நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.
பொருளாதாரம்
தற்போது அதிகாரிகள்மட்டத்தில் மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையே ஒருங்கிணைப்பு இருக்கிறது. ஆனால் பிரதமர் மற்றும் முதல்வர்கள் இடையே ஆலோசனை நடக்கும்போது அதுதான் இந்தப் பிரச்சினையை சமாளிப்பதற்கு உபாயமாக இருக்கமுடியும். கொரோனா வைரஸ் காரணமாக பொருளாதாரம் பாதிக்கப்படும் என்பதை உலகின் அனைத்து நாடுகளும் ஒப்புக் கொண்டிருக்கின்றன. இந்தியாவும் அதுபோல பாதிக்கப்படும் வாய்ப்பு இருக்கிறது. இது தவிர்க்கமுடியாதது.
வேறு வழியில்லை
வெளியில் இருந்து வரக்கூடிய ஒரு பிரச்சனை இது என்பதால் அரசை நாம் குறை சொல்ல முடியாது. எந்த மாதிரி தாக்கம் ஏற்பட்டாலும் அந்த வலியை நாம் பொறுத்துத்தான் ஆகவேண்டும். ஏற்கனவே இந்தியாவில் பொருளாதாரம் மந்தமான நிலையில் உள்ளது. இதற்கு அரசாங்கம் நடத்துவோர் எடுத்த மோசமான முடிவுகள் காரணம். மக்களிடம் பொருட்களுக்கான தேவையை அதிகரிப்பது எப்படி என்று தெரியாத நிலையில்தான் அரசு உள்ளது. அது வேறு விஷயம். ஆனால், கொரோனா வைரஸ் காரணமாக ஏற்படக்கூடிய பிரச்சினையை உடனடியாக சமாளித்துவிட முடியாது, அதை நாம் பொறுத்துத்தான் ஆகவேண்டும். இவ்வாறு ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.