ப.சிதம்பரம் செல்போன் சுவிட்ச் ஆப்.. கார் டிரைவரிடம் அமலாக்கப்பிரிவு தீவிர விசாரணை
டெல்லி: முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. அவர் எங்கே இருக்கிறார் என்பது தொடர்பாக கார் டிரைவரிடம் அமலாக்கத் துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர்.
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் ப.சிதம்பரம் தரப்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதை அவசர வழக்காக விசாரிக்க நீதிபதி ரமணா மறுப்பு தெரிவித்துவிட்டார். இது தொடர்பாக தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் முடிவெடுப்பார் என்று அறிவித்துவிட்டார்.
ரஞ்சன் கோகாய் மதியத்துக்கு மேல் இந்த பிரச்சினை தொடர்பாக முடிவு எடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு நடுவே சிதம்பரத்தை கைது செய்துவிட வேண்டும் என்று சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை அதிகாரிகள் தீவிரமாக முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இது தொடர்பாக அதிகாரிகள் தரப்பில் கூறப்படுவதாவது: சிதம்பரத்தின் செல்போன் எங்கே செயல்படுகிறது என்பதை அறிந்து கொண்டு அவர் இருப்பிடத்தை கண்டுபிடித்து விடலாம் என்று முயற்சி செய்து பார்த்தோம். ஆனால் சிதம்பரத்தின் செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. அவரது போன் கடைசியாக டெல்லியில் உள்ள லோதி சாலையில் செயல்பட்டுள்ளது, என்று அந்த அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இதனிடையே சிதம்பரம் எங்கே இருக்கிறார் என்பது குறித்து அவரது கார் ஓட்டுநரிடம் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். ஆனால் அவர் எங்கே இருக்கிறார் என்பது தொடர்பாக தனக்கு தெரியாது என்று ஓட்டுநர் கூறியுள்ளார். இதனால் உச்சகட்ட பரபரப்பு நிலவி வருகிறது.