டெல்லி ஜகோர்ட் கேட்ட ஒற்றை கேள்வி.. உடனே மனுவை திரும்ப பெற்றார் ப சிதம்பரம்
Recommended Video
டெல்லி: ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் ஜாமீன் கோரி தில்லி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த இரண்டு தனித்தனி மனுக்களில் ஒரு மனுவை திரும்ப பெற்றார்.
ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் ரூ.305 கோடி வெளிநாட்டு நிதியைப் பெறுவதற்கு மத்திய அமைச்சராக இருந்த ப சிதம்பரம், முறைகேடாக அனுமதி வழங்கியதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக ப.சிதம்பரம் மற்றும் அவரது மகனும், சிவகங்கை தொகுதி எம்.பி.யுமான கார்த்தி சிதம்பரம் மீதும் சிபிஐ கடந்த 2017-ஆம் ஆண்டு வழக்குப்பதிவு செய்தது.
தொடர்ந்து விசாரணை நடத்தி வந்த சிபிஐ போலீசார் சில மாதங்களுக்கு முன்பு ப சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்தை கைது செய்தனர். பின்னர் சில வாரங்களில் ஜாமினில் விடுதலை ஆனார். இதற்கிடையே சட்டவிரோதப் பணப்பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறையும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியது.
சிதம்பரம் மனு தள்ளுபடி
இதையடுத்து தன்னை வழக்குகளில் கைது செய்யப்படாமல் இருப்பதற்காக, ப.சிதம்பரம் முன்ஜாமீன் கோரி தில்லி உயர்நீதிமன்றதில் மனு தாக்கல் செய்தார். ஆனால் கடந்த மாதம் 20-ஆம் தேதி ப சிதம்பரத்தின் மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
21ம் தேதி கைதானார்
இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் அவர் மேல்முறையீடு செய்தார்.அந்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் முன்பே கடந்த மாதம் 21-ஆம் தேதி சிபிஐ அதிகாரிகள் ப.சிதம்பரத்தை கைது செய்தனர். இதையடுத்து அடுத்தடுத்த நாள்களில் ப.சிதம்பரத்தின் மேல்முறையீட்டு மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்றம், சிபிஐ பதிவு செய்த வழக்கில் அவர் ஏற்கெனவே கைது செய்யப்பட்டுவிட்டதால், அந்த வழக்கில் முன்ஜாமீன் கோரிய மனுவை நிராகரித்து உத்தரவிட்டது. அத்துடன், அமலாக்கத் துறை பதிவு செய்த வழக்கிலும் ப சிதம்பரத்துக்கு முன்ஜாமீன் அளிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.
சிபிஐ நீதிமன்றம் உத்தரவு
அதற்கிடையே , ப.சிதம்பரத்தை காவலில் வைத்து விசாரித்து வரும் சிபிஐ தில்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தின் உத்தரவால் தில்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார். வரும், 19-ஆம் தேதி வரை திகார் சிறையில் தான் ப சிதம்பரம் இருக்க உள்ளார்.
ப சிதம்பரம் ஜாமின் கோரி மனு
இந்நிலையில், இந்த வழக்கில் ஜாமீன் கோரி தில்லி உயர்நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் நேற்று மனு தாக்கல் செய்தார். இதேபோல், திகார் சிறையில் அடைக்க உத்தரவிட்ட தில்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்தும் ப சிதம்பரம் மனு தாக்கல் செய்துள்ளார். ப சிதம்பரம் தனது மனுவில் மத்திய அரசின் தூண்டுதல் பேரில் விசாரணை அமைப்புகள் செயல்படுவதாகவும், தன்னுடைய கைது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்றும் குற்றம்சாட்டி உள்ளார். இந்த மனுக்கள் டெல்லி உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது
நீதிமன்றம் கேள்வி
இந்த மனுக்கள் மீதான விசாரணை, நீதிபதி சுரேஷ் கெய்ட் முன் நேற்று நடந்தது. அப்போது கபில் சிபலிடம் நீதிபதி சுரேஷ் கெய்ட் கீழமை நீதிமன்றத்தை அணுகாமல் நேரடியாக இங்கு வந்தது ஏன் கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த கபில் சிபல், சட்டத்தை மதிக்கும் நல்ல குடிமகனாக சிதம்பரம் இருக்கிறார். விசாரணைக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் நடந்து கொள்ள மாட்டார், எனவே ஜாமின் வழங்க வேண்டும் . சிபிஐ அழைக்கும் நேரத்தில் நிச்சயம் விசாரணைக்கு ஆஜராவார் என்றார். அப்போது நீதிபதி, ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீது பதிலளிக்குமாறு சிபிஐக்கு நோட்டீஸ் அனுப்பி உத்தரவு பிறப்பித்தார். மேலும், இந்த விவகாரம் தொடர்பாக, இரண்டு தனித்தனி மனுக்களை ப.சிதம்பரம் தாக்கல் செய்திருப்பதற்கும் நீதிபதி கேள்வி எழுப்பினார். இதையடுத்து, திகார் சிறையில் அடைத்ததற்கு எதிரான மனுவை சிதம்பரம் திரும்பப் பெற்றார்.