தனி நபரை தீவிரவாதி என்பதா.. உபா சட்டத் திருத்தத்திற்கு ராஜ்யசபாவில் ப.சிதம்பரம் கடும் எதிர்ப்பு
Recommended Video
டெல்லி: உபா சட்ட திருத்த மசோதா ராஜ்யசபாவில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தில் (UAPA - உபா சட்டம்) மத்திய அரசு மாற்றம் கொண்டு வர முடிவு செய்துள்ளது. தனிப்பட்ட ஒருவரை தீவிரவாதி அல்லது தீவிரவாத இயக்கத்துடன் தொடர்புடையவர் என்று இந்த சட்டம் மூலம் கைது செய்து விசாரிக்க முடியும்.
இந்த சட்ட திருத்தம் மூலம் என்ஐஏ அமைப்பு, குற்றம்சாட்டப்பட்டவர்களின் நிலத்தை, சொத்தை பறிமுதல் செய்யலாம். அதேபோல் என்ஐஏ அமைப்பிற்கு இந்த புதிய சட்ட திருத்தம் கூடுதல் பலத்தை வழங்குகிறது.
இந்த மசோதா ஏற்கனவே லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட்டு அங்கு நிறைவேற்றப்பட்டுவிட்டது. இந்த நிலையில் இன்று இந்த மசோதா ராஜ்ய சபாவில் தாக்கல் செய்யப்பட்டது. லோக்சபாவில் இந்த மசோதாவிற்கு ஆதரவாக திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் வாக்களித்தன. ராஜ்யசபாவிலும் அக்கட்சிகள் ஆதரவாகவே வாக்களிக்கும் என்று கருதப்படுகிறது.
காஷ்மீருக்கான அரசியல் சாசனத்தின் 370, 35ஏ பிரிவுகளை நீக்கியே தீருவது என பாஜக அடம்பிடிப்பது ஏன்?
இன்று ராஜ்யசபாவில் இந்த மசோதா மீதான விவாதத்தில் பேசிய ப.சிதம்பரம் கூறியதாவது: இப்போது இந்த சட்டம், சட்டவிரோத செயல்களைக் கையாள்கிறது, இதேபோல பயங்கரவாதச் செயல்களையும் கையாள்கிறது. ஆனால் இவை இரண்டும் ஒன்றல்ல, அவை தனித்தனியாக வரையறுக்கப்பட்டுள்ளன... சட்ட விரோத செயல் என்பது வேறு, தீவிரவாத செயல் என்பது வேறு.
நான் ஏன் இதைச் சொல்கிறேன் என்றால், இந்தச் சட்டம் வருவதற்கு முன்பே, ஒரு நபரை அந்தச் சட்டத்தின் கீழ் தண்டனைக்குட்படுத்த முடியும். சட்டவிரோத அமைப்பை தண்டிப்பதற்கும் சட்டவிரோத அமைப்பின் உறுப்பினரை தண்டிப்பதற்கும் எந்த வித்தியாசமும் இல்லை. ஏற்கனவே சட்டம் இப்படி சொல்லும்போது, இந்த திருத்தத்தை ஏன் கொண்டு வருகிறீர்கள்? நாம் பேசுவது அமைப்பின் சுதந்திரம் பற்றி அல்ல, தனிமனிதனின் சுதந்திரம். இதை நாம் நசுக்கப்போகிறோம்.
உபா சட்டம் இதுவரை 6 முறை திருத்தப்பட்டுள்ளது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது, 2008 மற்றும் 2013 ஆம் ஆண்டுகளில் திருத்தம் செய்தோம். பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதில் காங்கிரஸ் அரசு உறுதியை காட்டியுள்ளது. தீவிரவாதத்திற்கு எதிராக நாங்கள் மென்மையான போக்கை கடைபிடிக்கவில்லை. இவ்வாறு ப.சிதம்பரம் பேசினார். இடையே, காங்கிரஸ் மற்றும் பாஜக உறுப்பினர்கள் நடுவே வாக்குவாதம் ஏற்பட்டு லேசான கூச்சல், குழப்பம் நிலவியது.