8 கிலோ குறைந்துவிட்டார்.. ட்ரீட்மென்ட் திருப்தியில்லை.. ப.சி.யை ஹைதராபாத் கொண்டு செல்ல கோரிக்கை
Recommended Video
டெல்லி: குடல் அழற்சி நோயால் அவதிப்பட்டு வரும் ப சிதம்பரத்துக்கு டெல்லி சிறை நிர்வாகம் அளித்த மருத்துவ சிகிச்சை திருப்திகரமானதாக இல்லை என அவரது குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர்.
கடந்த 2017-ஆம் ஆண்டு ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் விதிகளை மீறி வெளிநாட்டு முதலீட்டுக்கு அனுமதி அளித்திருப்பதாக சிபிஐ வழக்கு பதிவு செய்தது. அதைத் தொடர்ந்து 2018-ஆம் ஆண்டு சிதம்பரம் மீது அமலாக்கத் துறையும் பண மோசடி வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கில் கடந்த ஆகஸ்ட் 21-ஆம் தேதி சிபிஐ, சிதம்பரத்தை கைது செய்தது. இதையடுத்து சிபிஐ காவலில் இருந்த சிதம்பரத்தை திகார் சிறையில் அடைக்க டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த நிலையில் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சிதம்பரத்தின் ஜாமீன் மனுக்கள் தொடர்ந்து தள்ளுபடி செய்யப்பட்டு வந்தது.
கடும் பாதிப்பு
இந்த நிலையில் அவரது நீதிமன்றக் காவலை மேலும் 14 நாட்களுக்கு நீட்டித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதாவது நவம்பர் 27-ஆம் தேதிவரை சிறையில் இருக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் குடல் அழற்சி நோய் காரணமாக ஏற்கெனவே சிதம்பரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்.
உடல்ரீதியாக
இதையடுத்து அவருக்கு எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் இதுகுறித்து சிதம்பரத்தின் குடும்பத்தினர் கூறுகையில் சிதம்பரத்திற்கு அளித்த சிகிச்சைகள் குறித்து எங்களுக்கு திருப்தி இல்லை. அவர் உடல்நல ரீதியாக மிகவும் பாதிக்கப்பட்டுள்ளார்.
மருத்துவர்
அவரை ஹைதராபாத்தில் உள்ள குடலியல் சிகிச்சை நிபுணர் ராகேஸ்வர ராவிடம் உடனடியாக அழைத்து செல்ல வேண்டும். அந்த மருத்துவருக்குத்தான் சிதம்பரத்தின் உடல்நிலை குறித்து நன்கு தெரியும், எத்தகைய சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும் அவருக்கு தெரியும்.
நாகேஸ்வர ராவ்
கடந்த 2016-இல் சிதம்பரம் நாகேஸ்வர ராவிடம்தான் சிகிச்சை மேற்கொண்டார். இதனால் அவரிடமே சிதம்பரத்தை அழைத்து செல்ல வேண்டும். அதற்கு அவருக்கு உடனடியாக ஜாமீன் வழங்க வேண்டும். சுருக்கமாக சொல்ல போனால் சிறை நிர்வாகம் அளித்த சிகிச்சை எங்களுக்கு திருப்தி அளிக்கவில்லை என்று குடும்பத்தினர் தெரிவித்தனர்.