ப.சிதம்பரத்தின் நீதிமன்றக் காவல் மேலும் நீட்டிப்பு.. அக்.3 வரை நீட்டித்து உத்தரவு
Recommended Video
டெல்லி: முன்னாள் மத்திய அமைச்சர் ப.சித்மபரத்தின் நீதிமன்றக் காவல் இன்றுடன் முடிவடைந்ததையடுத்து அவர் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவருக்கு அக்டோபர் 3-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ப.சிதம்பரம் கடந்த ஆகஸ்ட் 22-ஆம் தேதி கைது செய்யப்பட்டார். சுமார் 15 நாட்கள் சிபிஐ காவலில் வைக்கப்பட்ட அவர் இந்த வழக்கில் ஜாமீன் கோரி டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.
இந்த நிலையில் அவரை 14 நாட்களுக்கு நீதிமன்றக் காவலில் திகார் சிறையில் அடைக்க நீதிபதி ஷைனி உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து செப்டம்பர் 5-ஆம் தேதி மாலை அவர் சிறையில் அடைக்கப்பட்டார். சிறைக்கு சென்ற பின்னர் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்தார்.
எனினும் தனது 74-ஆவது பிறந்தநாளின்போதும் அவர் சிறையிலேயே இருந்தது குடும்பத்தினரையும் ஆதரவாளர்களையும் கடுமையாக பாதித்தது. இந்த நிலையில் அவரது 14 நாட்கள் நீதிமன்றக் காவல் இன்றுடன் முடிவடைந்தது.
இதையடுத்து அவர் டெல்லியில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் இன்று மதியம் 2.30 மணியளவில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது ப.சிதம்பரத்தின் நீதிமன்றக் காவலை மேலும் 14 நாட்களுக்கு நீட்டிக்க சிபிஐ கோரிக்கை வைத்தது. இந்த நிலையில் அவரது நீதிமன்றக் காவலை வரும் அக்டோபர் 3-ஆம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார். இதனால் ப. சிதம்பரம் மீண்டும் திகார் சிறையில் அடைக்கப்பட்டார். இன்று விடுவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் மீண்டும் சிறை செல்ல நேரிட்டது.