"மிரட்டி பணிய வைத்த" ப.சிதம்பரம்.. இதுதான் ராகுல் காந்தியின் மனமாற்றத்துக்கு காரணம்!
டெல்லி: ராகுல் காந்தி ராஜினாமா செய்தால் தென்னிந்திய தலைவர்கள் தற்கொலை செய்து கொள்வர் என ப.சிதம்பரம் கூறியதன் காரணத்தால் ராகுல்காந்தி தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்யும் முடிவை கைவிட்டதாக கூறப்படுகிறது.
சோனியா காந்தியிடம் இருந்த காங்கிரஸ் தலைவர் பதவி அவரது உடல்நலம் பாதிப்பு காரணமாகவும், காங்கிரஸ் கட்சியின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு ராகுல்காந்திக்கு வழங்க சோனியா முடிவு செய்தார்.
இதையடுத்து காங்கிரஸ் தலைவருக்கான தேர்தலில் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட ராகுல்காந்தி கடந்த 2017-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பதவியேற்றார். இதைத் தொடர்ந்து இவரது தலைமையில் நடந்த சில மாநிலங்களின் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றது.
தேர்தல்
இதையடுத்து ராகுல்காந்தியின் தலைமையிலான தேசிய முற்போக்கு கூட்டணி நாடாளுமன்றத் தேர்தலை சந்தித்தது. இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி எதிர்க்கட்சித் தலைவர் பதவி அந்தஸ்தை கூட பிடிக்க முடியாத பரிதாபத்துக்குரிய நிலைக்கு சென்றுவிட்டது.
ராஜினாமா
இதையடுத்து தோல்விக்கு பொறுப்பேற்று ராகுல்காந்தி தலைவர் பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்ததாக கூறப்பட்டது. இந்த நிலையில் ராஜ்பப்பர் உள்பட பல்வேறு மாநில காங்கிரஸ் தலைவர்கள் தோல்விக்கு பொறுப்பேற்று ராஜினாமா செய்தனர்.
தலைமை காரணம்
இதையடுத்து ராகுல்காந்தி தனது ராஜினாமா கடிதத்தை கட்சிக்கு அனுப்பினார். இதைத் தொடர்ந்து அக்கட்சியின் காரிய குழு கமிட்டி கூடியது. இவரது ராஜினாமாவை செயற்குழு உறுப்பினர்கள் ஏற்கவில்லை. காங்கிரஸ் கட்சியின் தோல்விக்கு ராகுலின் தலைமைதான் காரணம் என வடமாநில தலைவர்கள் கூறியதாக தெரிகிறது.
ப.சிதம்பரம்
ஆனால் தென் மாநில தலைவர்கள் ராகுலின் விலகலை விரும்பவில்லை. இதையடுத்து ராகுல்காந்தி தனது முடிவை மாற்றிக் கொண்டார். இதற்கு பெரிதும் காரணமாக சொல்லப்படுவது காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம் என கூறப்படுகிறது.
ராகுல்காந்தி மனவருத்தம்
டெல்லியில் நடந்த காரிய கமிட்டி குழு கூட்டத்தில் பேசிய ப.சிதம்பரம்,காங்கிரஸ் தலைவர் பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்தால் தென்னிந்திய தலைவர்கள் தற்கொலை முடிவுக்கு செல்வர் என கூறியுள்ளார். இதனை கேட்ட ராகுல்காந்தி மன வருத்தமடைந்து தனது முடிவை மாற்றிக் கொண்டதாக கூறப்படுகிறது.