நாடாளுமன்ற கூட்டத்தொடரில் ப சிதம்பரம் பங்கேற்பது எப்போது.. அவரது மனைவி நளினி சிதம்பரம் பேட்டி
டெல்லி: உடல்நலனை கவனித்துவிட்டு அதன் பிறகே ராஜ்யசபாவில் நிகழ்ச்சிகளில் தனது கணவர் ப சிதம்பரம் பங்கேற்பார் என அவரது மனைவி நளினி ப சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
ஐ.என்.எக்ஸ் மீடியா பண மோசடி வழக்கில் ப சிதம்பரத்துக்கு ஜாமீன் வழங்கிய உச்சநீதிமன்றத்தின் உத்தரவை காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரத்தின் மனைவி நளினி வரவேற்பு தெரிவித்துள்ளார்.
புதன்கிழமை இரவு 8 மணி அளவில் ப சிதம்பரம் திஹார் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார். அதற்கு முன்னதாக பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு தொலைப்பேசி வாயிலாக நளினி சிதம்பரம் பேட்டி அளித்தார்.
மாநிலங்களவை
மூத்த வழக்கறிஞரான நளினி, தனது கணவருக்கு ஜாமீன் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைவதாகக் கூறினார். ப சிதம்பரம் உடல்நிலையை கவனித்துக்கொண்ட பிறகு அவர் மாநிலங்களவை நடவடிக்கைகளில் கலந்து கொள்ளத் தொடங்குவார் என்றும் அவர் கூறினார்.
13ம்தேதி முடிகிறது
நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடர் டிசம்பர் 13 ஆம் தேதி முடிவடைகிறது. எனவே அதற்கு ப சிதம்பரம் பங்கேற்பாரா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
வரவேற்பு
முன்னதாக ப சிதம்பரத்துக்கு ஜாமீன் கிடைத்திருப்பதை ப சிதம்பரத்தின் மகனும் சிவகங்கை தொகுதி எம்பியுமான கார்த்தி சிதம்பரம் வரவேற்றுள்ளார்.
அரசு சித்ரவதை
சி.பி.ஐ மற்றும் அமலாக்கத்துறையின் காவலில் மற்றும் சிறையில் அடைக்கப்பட்டிருந்தபோது ப.சிதம்பரத்தை 105 நாட்களுக்கு மேலாக மத்திய அரசு மனரீதியாக சித்திரவதை செய்ததாக ப சிதம்பரம் குடும்பத்திற்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன.
வெளியே வருவார்
இந்த வழக்குகள் அவரை கொஞ்சமும் பாதிக்கவில்லை என்றும் அவர் மீது போட்டப்பட்ட வழக்குகளில் இருந்து சுத்தமாக வெளியே வருவார் என்பது உறுதி என்றும் இவை அரசியல் காரணங்களுக்காக போடப்பட்ட வழக்குகள் என்றும் ப சிதம்பரத்துக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்தனர்.