ப.சி. வெளிநாடு தப்பி செல்லமாட்டார்.. வேண்டுமானால் பாஸ்போர்ட்டை ஒப்படைக்க நாங்கள் ரெடி.. கபில் சிபல்
Recommended Video
டெல்லி: முன்னாள் நிதி அமைச்சர் ப சிதம்பரத்தின் பாஸ்போர்ட்டை ஒப்படைக்க தயார் என வழக்கறிஞர் கபில் சிபல் வாதம் செய்தார்.
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ரூ 305 கோடி முறைகேடு செய்ததாக எழுந்த புகாரின் முன்னாள் நிதி அமைச்சர் ப சிதம்பரத்தின் மீது அமலாக்கத் துறை சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கு பதிவு செய்துள்ளது. சிபிஐயும் ஒரு தனி வழக்கை பதிவு செய்துள்ளது.
இந்த வழக்கில் கடந்த ஆகஸ்ட் மாதம் 21-ஆம் தேதி சிதம்பரம் சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். இதையடுத்து அவர் செப்டம்பர் 5-ஆம் தேதி முதல் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
சிபிஐ சிறப்பு நீதிமன்றம்
இந்த நிலையில் அவர் கடந்த மாதம் 16-ஆம் தேதி அமலாக்கத் துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். அவரை தொடர்ந்து நவம்பர் 13-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அமலாக்கத் துறை
இதனிடையே சிபிஐ வழக்கில் சுப்ரீம் கோர்ட் அவருக்கு கடந்த மாதம் 22-ஆம் தேதி நிபந்தனை ஜாமீன் வழங்கியது. எனினும் அவர் அமலாக்கத் துறை காவலில் இருப்பதால் அவரால் வெளியே வரமுடியவில்லை. இந்த நிலையில் அமலாக்கத் துறை வழக்கில் ஜாமீன் கோரி ப சிதம்பரம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள்
இந்த மனு மீது நீதிபதி சுரேஷ் குமார் கெயித் அமர்வு விசாரணை நடத்தியது. அப்போது ப சிதம்பரம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கபில் சிபல் தன் தரப்பு வாதங்களை முன் வைத்தார். அவர் கூறுகையில் அமலாக்கத் துறை தாக்கல் செய்த பதில் மனுவில் சிதம்பரம் சாட்சியங்களை கலைக்க முயற்சித்ததாக ஆதாரம் இல்லாத குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
எங்கும் செல்லமாட்டார்
இது மிகவும் தவறானதாகும். அவர் எங்கும் தப்பிச் செல்லமாட்டார். அவருடைய பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்களை நீதிமன்றத்தில் ஒப்படைக்க நாங்கள் தயாராக உள்ளோம். எனவே அவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும் என கோரினார். இது தொடர்பான விசாரணை இன்றும் நடக்கிறது.